பாஜகவுக்கு ‘குட் பை’ சொன்ன அமைச்சர்!


அகிலேஷுடன் மவுரியா

உத்தரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் தேர்தல் நடக்க உள்ள நிலையில், ஆளும் பாஜக அமைச்சர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியில் இணைந்திருப்பது ஆளும் பாஜகவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு பிப்ரவரி மாதம் 10-ம் தேதி, முதல் கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. உபியில் ஆளும்கட்சியான பாஜகவுக்கும், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருந்தாலும் காங்கிரசும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் தேர்தலில் கணிசமான தொகுதிகளைக் கைப்பற்ற முனைப்பு காட்டி வருகின்றன.

அகிலேஷ் யாதவ்

“நீ தான் உபியில் ஆட்சி அமைக்கப் போகிறாய்” என்று கிருஷ்ணர் தினந்தோறும் கனவில் கூறி வருவதாக, பரபரப்பை உண்டாக்குகிறார் அகிலேஷ் யாதவ். தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக அரசையும் அவர் கடுமையாக விமர்சித்து வருகிறார். தேர்தல் கருத்துக் கணிப்பும் சமாஜ்வாதி கட்சிக்கு சாதகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தேர்தல் நெருங்கி வரும் சூழலில், உபி அமைச்சர் சுவாமி பிரசாத் மவுரியா, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜக கட்சியில் இருந்து விலகி, சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளார். “பட்டியலினத்தவர்கள், பிற்படுத்தப்பட்டோர், விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்கள் மீதான பாஜக அரசின் கடுமையான ஒடுக்குமுறை காரணமாகத்தான் விலகுகிறேன்” என்று அவர் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆளும்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரே சமாஜ்வாதி கட்சியில் இணைந்திருப்பது, உபி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

x