ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாறுதல் விவகாரம்: மத்திய அரசுடன் மல்லுக்கட்டத் தயாராகும் மாநில அரசுகள்!


பிரதமர் மோடியுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

ஐஏஎஸ் அதிகாரிகளை ஒரு மாநிலத்திலிருந்து மத்திய அரசுப் பணிக்கு ‘அயல்பணி இடமாறுதல்’ (டெபுடேஷன்) அடிப்படையில் பகிர்ந்துகொள்ள சட்டத்தில் வழிமுறைகள் உள்ளன. அவற்றில் சிறிய திருத்தம் செய்ய விரும்புவதாகக் கூறி மாநிலங்களிடம் கருத்து கேட்டிருக்கிறது மத்திய அரசு. பெரும்பாலான அல்லது பாஜக அல்லாத பிற கட்சிகளால் ஆளப்படும் மாநிலங்களிலிருந்து இதற்கு எதிர்ப்புகள் வரும் என நிச்சயமாகச் சொல்லலாம்.

ஐஏஎஸ் (பணிநிலை) விதிகள், 1954 சட்டத்தின் 6-வது பிரிவில் மேலும் துணைப் பிரிவைச் சேர்க்க மத்திய அரசு விரும்புகிறது. தொடர்புள்ள மாநில அரசின் ஒப்புதலோடு எந்த ஐஏஎஸ் அதிகாரியையும் மத்திய அரசு தன்னுடைய சேவைக்குக் குறிப்பிட்ட காலம் வரை பயன்படுத்திக்கொள்ள இந்தப் பிரிவு வழி செய்கிறது. இப்போது இந்தப் பிரிவை அப்படியே பராமரிக்கப் போகிறது மத்திய அரசு. ஆனால் அடுத்து அது செய்ய விரும்பும் திருத்தம்தான் மாநிலங்களுடைய எதிர்ப்பைப் பெறக் கூடியது.

ஏற்கெனவே இது போன்ற அதிகார மேலாதிக்கம் தொடர்பாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது எதிர்ப்புகளைப் பதிவு செய்திருக்கிறார்.

ஒரு மாநில அரசுக்கு அனுமதிக்கப்பட்ட மொத்த ஐஏஎஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை, அந்தந்த மாநிலங்களில் உண்மையாக பணியில் அமர்த்தப்பட்டுள்ள அதிகாரிகளின் எண்ணிக்கை ஆகியவற்றின் பின்னணியில், ஒன்றிய அரசுக்காக அயல் பணியில் விடுவிக்கக்கூடிய அதிகாரிகளின் எண்ணிக்கை (வெவ்வேறு நிலையில்) விவரங்கள் கொண்ட தயார்நிலைப் பட்டியலைத் தயாரிக்குமாறு மாநிலங்களைக் கேட்டுக்கொள்ள முடிவு செய்திருக்கிறது மத்திய அரசு. அந்தந்த மாநில அரசுகளுடன் ஆலோசனை கலந்த பிறகு, எத்தனை ஐஏஎஸ் அதிகாரிகள் அயல்பணிக்காகத் தேவைப்படுவார்கள் என்பது தீர்மானிக்கப்படும். இதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் இறுதி முடிவை மத்திய அரசு எடுக்கும். குறிப்பிட்ட கால வரையறைக்குள் மாநில அரசு அல்லது மாநில அரசுகள் மத்திய அரசின் ஆணையை நிறைவேற்றித்தர வேண்டும் என்பது யோசனை. அதாவது கட்டளை. அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் மத்திய அரசு இது தொடர்பாகக் கடிதம் அனுப்பியிருக்கிறது.

ஏற்கெனவே இது போன்ற அதிகார மேலாதிக்கம் தொடர்பாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது எதிர்ப்புகளைப் பதிவு செய்திருக்கிறார். மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த வன்செயல்களைத் தடுக்கத் தவறியது தொடர்பாக மாநிலத் தலைமைச் செயலரும், காவல் துறைத் தலைவரும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கோரியது. இந்திய நிர்வாகப் பணியில் இருப்பவர்கள் ஒன்றிய அரசின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டவர்கள், விளக்கம் கூற வேண்டியவர்கள் என்ற அந்த நிலைக்கு மம்தா பானர்ஜி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையை எடுக்கக் கூடாது என்று எதிர்க் குரல் கொடுத்தார். இப்போது இந்த உத்தேச திருத்தத்தையும் இரண்டு காரணங்களுக்காக கடுமையாக எதிர்ப்பார் என்று மேற்கு வங்க அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதலாவது, ஒரு மாநிலம் எத்தனை ஐஏஎஸ் அதிகாரிகளை வைத்துக்கொள்ளலாம் என்பதைத் தீர்மானிக்கும் உரிமையை மத்திய அரசு இந்தத் திருத்தம் மூலம் மறைமுகமாகப் பெறுகிறது. அடுத்து, மாநிலத்தில் சிறப்பாகச் செயல்படும் எந்த அதிகாரியையும் தனக்கென்று மத்திய அரசு கேட்டுப் பெற முடியும். இவற்றுக்காக மம்தா எதிர்ப்பு தெரிவிப்பார் என்று அந்த வட்டாரங்கள் கூறுகின்றன. மம்தா மட்டுமல்ல பெரும்பாலான முதலமைச்சர்கள் இப்படிப்பட்ட திருத்தங்களை ஏற்கவே மாட்டார்கள் என்பதே உண்மை.

இப்படிக் கடிதம் எழுதிக் கேட்பதற்குப் பதிலாக மாநில முதலமைச்சர்களின் மாநாட்டைக் கூட்டி, ஐஏஎஸ் அதிகாரிகளின் பணி நிலை மேம்பாடு, நிர்வாகச் சீர்திருத்தம், மக்களுடைய தேவைக்கேற்ப அரசு இயந்திரம் வேகமாகச் செயல்பட வேண்டிய அவசியம் ஆகியவை குறித்து மத்திய அரசு விவாதித்த பிறகு இந்த யோசனையையும் கூறியிருந்தால், மாநில முதல்வர்கள் கலந்து பேசி கருத்தொற்றுமை காண வசதியாக இருந்திருக்கும். அப்படி நடக்காததால்தான் இத்தனைக் குழப்பமும்!

x