மு.க.ஸ்டாலினுக்கு மலையாள இதழ் புகழாரம்!


முதல்வர் மு.க.ஸ்டாலின்

மலையாளத்தில் வெளியாகும் பாரம்பரிய இதழ்களில் ஒன்று ‘தீபிகா’. அண்மையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து ‘கனவுகளின் தந்தை’ என்ற தலைப்பில் அந்த இதழில் வெளியான கட்டுரை, பொதுவெளியில் கவனம் பெற்றிருக்கிறது.

மலையாளத்தில் வெளியான கட்டுரையின், தமிழாக்கத்தின் சுருக்கப்பட்ட வடிவம் இங்கே:

கனவுகளின் தந்தை மு.க.ஸ்டாலின்!

தமிழகத்தைப் பொறுத்தவரை சாமான்ய மக்களுடன் நெருக்கமாக இருக்கும் எந்த ஒரு முதலமைச்சரும் அந்த மக்களால் கொண்டாப்படுகிறார்கள். தங்களது அன்றாட நடவடிக்கை ஒவ்வொன்றிலும், பொதுமக்களுடன் நெருக்கமாக இருப்பதை உறுதி செய்து கொள்வதற்காக அவர்களுமே மெனக்கிடுகிறார்கள்.

அதன் காரணமாகத்தான் அவர்களில் பெரும்பாலானோரை மக்கள், தங்களுக்குப் பிடித்த வகையில் விதவிதமான பட்டப்பெயர்களைச் சூட்டி அழைத்தார்கள். அண்ணாதுரை, 'அண்ணா' என்றும், கருணாநிதி 'கலைஞர்' என்றும் அழைக்கப்பட்டார். இதே மரபுப்படி, தமிழகத்தின் புதிய முதலமைச்சரான மு.க.ஸ்டாலின், திமுக இளைஞரணியின் தலைவரானதிலிருந்து 'தளபதி' என அழைக்கப்பட்டார். ஆனால் அவர் திமுகவின் தலைவரான பின்னர், கட்சியும் மக்களும் அவரை 'தலைவர்' என அழைக்கும் கருத்து பரவலாகி உள்ளது.

தமிழகம் நம்பர் 1 என்பதே லட்சியம்

ஒரு பேட்டியில், தான் முதலமைச்சர் அல்ல, மக்களின் அன்புத் தந்தை என்று குறிப்பிட்டிருந்தார் மு.க. ஸ்டாலின். தனது தந்தையைப் போலவே தானும் தமிழக மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாகவும், தமிழகத்தை இந்தியாவின் நம்பர் 1 மாநிலமாக உருவாக்குவதே தனது லட்சியம் என்றும் கூறியிருந்தார்.

மக்களுக்கான சேவைகளிலேயே அவர் தனது முழுக்கவனத்தையும் செலுத்துகிறார். ஒரு நாளைக்கு 18 முதல் 19 மணி நேரம் வேலை செய்கிறார். தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்ற முதல் நாளிலிருந்தே, மக்கள் சேவையில் அவர் காட்டும் அக்கறையும் அர்ப்பணிப்பும் அவரை 'மக்களின் முதல்வராக' பேச வைத்துள்ளது.

சிறந்த நிர்வாகத்தைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக அமைச்சர்கள் தேர்வில் அவர் மிகவும் கவனமாக இருந்தார். கல்வித் தகுதியையும், திறமையையும், அவர்கள் மீதான பொதுமக்களின் கருத்தையும் அடிப்படையாகக் கொண்டே அவர்களைத் தேர்வு செய்தார். முதலமைச்சராக பதவியேற்றபோது கரோனாநெருக்கடியால் ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்கக்கூடிய திறமையான ஒருவர் நிதித்துறைக்கு தேவை என்ற எண்ணத்தில்தான், பழனிவேல் தியாகராஜனை நிதியமைச்சராக தேர்வு செய்தர். அதேபோன்றுதான் சீனியாரிட்டியை கடந்து, தமிழகத்தின் சிறந்த ஐஏஎஸ் அதிகாரியாக அறியப்படும் இறையன்புவை தலைமைச் செயலாளராக நியமித்தார்.

மு.க. ஸ்டாலினின் கனவு

பொருளாதார ஆலோசனைகளைப் பெறுவதற்காக நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் எஸ்தர் டஃப்லோ, முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் உள்ளிட்டோர் அடங்கிய குழு ஒன்றை தனக்காக உருவாக்கினார். தொடர்ந்து முதலீட்டாளர்கள் மாநாடு போன்றவற்றை நடத்தி தமிழகத்திற்கு இதுவரை ரூ.17,141 கோடி முதலீடுகளைப் பெற்றுள்ளார்.

தமிழகத்திற்கு அதிக முதலீடு, அதிக வேலைகள் மற்றும் வருமானம் என்பதே மு.க. ஸ்டாலினின் லட்சியமாக உள்ளது. தமிழகம் சிறப்பான இடத்தை அடைய வேண்டும் என்ற கனவும் அவருக்கு உள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின்

மக்களோடு நெருக்கம்

கடந்த தேர்தலுக்கு முன், திமுக அளித்த வாக்குறுதிகளில் மிக முக்கியமானவை ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுவிட்டன. எரிபொருளின் விலை ரூ.5 குறைக்கப்பட்டுள்ளது. பால் விலை குறைந்துள்ளது. அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இவையெல்லாம் மக்களுக்கு நேரடியாக பயனளிக்கும் வகையில் ஸ்டாலின் தலைமையிலான அரசு மேற்கொண்ட சில நடவடிக்கைகள்.

இத்தனை பணிகளுக்கு மத்தியிலும், மக்களிடம் நேரடியாகச் செல்வதையும், அவர்களுடன் தொடர்பு கொள்வதையும் அவர் விட்டுவிடவில்லை. அவர்களுக்கு தம்மால் என்னவெல்லாம் செய்திட முடியும் என்பதை அவர்களுக்குப் புரிய வைக்கிறார். கிராம சபைகளில் பங்கேற்பது, காவல் நிலையங்கள், பள்ளிகள் போன்ற பொது இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்வது, மக்களின் பிரச்னைகளைத் தீர்ப்பது போன்றவையெல்லாம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்துள்ளன.

மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும்

மேலும், அவர் கொண்டு வந்துள்ள 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம்' மூலம் மக்களின் புகார்கள் முதலமைச்சரின் கவனத்துக்கு நேரடியாக செல்வதால், அவர்களது பிரச்சனைகளை விரைவில் தீர்க்கப்படுகிறது. மேலும் மு.க. ஸ்டாலின் மேற்கொண்டு வரும் பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கையால் தமிழக மக்களின் வாழ்க்கைத்தரம் நிச்சயம் உயரும். அத்தகையதொரு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அவரது செயல்பாடுகள் இருக்கின்றன.

x