விற்பனைப் பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தும் கோல்கேட்!


‘நியாயமற்ற முறையில் விலை நிர்ணயிக்கப்படுவதால் மகாராஷ்டிரத்தில் விநியோகம் செய்யப்போவதில்லை’ என எச்சரிக்கை விடுத்த விற்பனைப் பிரதிநிதிகளிடம், இன்று (ஜன.4) பேச்சுவார்த்தை நடத்திவருகிறது கோல்கேட் - பாமோலிவ் நிறுவனம்.

இந்தியாவின் பல பகுதிகளில் செயல்பட்டுவரும் மளிகைக் கடைகள், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விற்பனை செய்துவருவதால் ரெக்கிட் பென்கிஸர், யுனிலீவர், கோல்கேட் போன்ற நிறுவனங்களின் விற்பனையில் 20 முதல் 25 சதவீதம் சரிந்திருப்பதாக, கடந்த நவம்பரில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது.

இதையடுத்து, ரிலையன்ஸ் போன்ற பெருநிறுவன விநியோக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அதே விலை நிர்ணயம் தங்களுக்கும் செய்யப்படாவிட்டால், மளிகைக் கடைகளுக்கு விநியோகம் செய்வதை நிறுத்திவிடுவோம் என விற்பனைப் பிரதிநிதிகள் எச்சரிக்கை விடுத்தனர். இதன் தொடர்ச்சியாக, மகாராஷ்டிரத்தில் ஜனவரி 1 முதல் கோல்கேட் நிறுவனத்தின் சில தயாரிப்புகளின் விநியோகத்தை நிறுத்திவிடப்போவதாக, சில விநியோகஸ்தர்கள் கடந்த வாரம் கூறியிருந்தனர்.

ஜியோமார்ட் பார்ட்னர் செயலி மூலம் ஆர்டர் செய்பவர்களுக்கு விலையில் தள்ளுபடி வழங்கப்படுவதால், பல கடைகள் அதில் ஆர்வம் காட்டுவதாகவும், இதனால் 4.5 லட்சம் விற்பனைப் பிரநிதிகளுக்குப் பாதிப்பு ஏற்படும் என்றும் விநியோகஸ்தர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இன்று அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறது கோல்கேட் - பாமோலிவ் நிறுவனம்.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இந்தப் பேச்சுவார்த்தை விநியோகஸ்தர்களுடன் நேரடியாக நடைபெறுகிறது என்றும், மகாராஷ்டிரத்தில் தங்கள் தயாரிப்புகளின் விநியோகம் தடைபடாமல் இருப்பதை உறுதிசெய்யப்போவதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

x