ஆர்யன் கானுக்கு ஜாமீன்: ஷாருக் கான் ரசிகர்களுக்கு தீபாவளி


சிறை சென்ற மகானும், தடுமாறிய தந்தையும்

3 வாரங்களுக்கும் மேலாக சிறையிலிருந்த ஆர்யன் கான், இன்று(அக்.30) ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களை உபயோகித்ததாக அக்.03 அன்று, ஆர்யன் கான் உள்ளிட்ட 20 பேர் கைதானார்கள். இவர்களில் முதல் குற்றவாளியாக பதிவு செய்யப்பட்ட ஆர்யன் கானை, ஜாமீனில் விடுவித்து மும்பை உயர் நீதிமன்றம் அக்.28 அன்று உத்தரவிட்டது. அது தொடர்பான ஆவணங்கள் சமர்ப்பிப்பதன் நடைமுறைகள் இழுபறியானதில், 2 இரவுகள் கூடுதலாக ஆர்யன் சிறையில் கழிக்க வேண்டியதாயிற்று.

திரைப்படம் ஒன்றில் ஷாருக் -ஜுஹி சாவ்லா

குற்றம்சாட்டபட்ட மற்றவர்களை தொடர்பு கொள்ளக்கூடாது, மீண்டும் குற்றத்துக்கு உரிய செயல்களில் இறங்கக் கூடாது, ஊடகங்களுக்கு பேட்டி தரக்கூடாது, போலீஸ் அனுமதியின்றி மும்பையை விட்டு வெளியேறக்கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஷாருக் கானின் குடும்ப நண்பரும் ஆரம்பகால திரைப்படங்களின் நாயகியுமான ஜூஹி சாவ்லா, ரூ.1 லட்சம் பிணை பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

ஆர்யன் கான்

மகன் கைதானதிலிருந்து பொதுவெளியில் முகம் கொடுக்காத ஷாருக், ஜாமீன் உறுதியானதும் அதற்காக உழைத்த வழக்கறிஞர் குழாமுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டார். இடையில் ஒருமுறை மகனை சந்திக்க, ஆர்தர் சாலை ஜெயிலுக்கு சென்று திரும்பினார்.

ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து, தாரைத் தப்பட்டைகள் முழங்க ஆர்யன் ஜாமீனை கொண்டாடி வருகிறார்கள். நேற்று இரவு முழுக்க விளக்குகள் ஒளிர ஷாருக்கின் மன்னத் இல்லம் விழாக்கோலம் பூண்டிருக்கிறது. போதை வழக்கில் கைதானவர்களில், சொகுசுக் கப்பலின் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான 6 பேருக்கும் மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

வழக்கறிஞர் குழாமுடன் ஷாருக்

’ஆர்யன் கான் வசமிருந்து போதைப் பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை, ஆர்யன் போதைப் பொருள் உபயோகித்திருக்கவில்லை ’என்ற வாதங்கள் அவரது ஜாமீன் கோரலில் பிரதானமாய் முன்வைக்கப்பட்டன. ஆர்யனுக்கு எதிரான முக்கிய ஆதாரமாக, போதைப்பொருள் சர்வதேச தரகருடனான வாட்ஸ்அப் ஆவணங்களை என்சிபி அதிகாரிகள் சமர்ப்பித்திருந்தனர். அவை அனைத்தும் ஒரு வருடத்துக்கு முந்தையவை என்றும், மேற்படி போதைப்பொருட்கள் அனுமதிக்கப்பட்ட வெளிநாடுகளில் ஆர்யன் இருந்தபோதான வாட்ஸ்அப் பதிவுகள் என்றும் ஆர்யன் தரப்பில் வாதிட்டார்கள். மணிக்கு கோடிகளில் கட்டணம் பெறும் வழக்கறிஞர்கள் அடங்கிய குழுவை, ஆர்யன் சார்பில் வாதாட தந்தை ஷாருக் கான் நியமித்திருந்தார்.

x