21 நாள் இடைக்கால ஜாமீன் நிறைவு: திஹார் சிறையில் அர்விந்த் கேஜ்ரிவால் சரண்


சிறைக்கு செல்லும் முன்பு பெற்றோரிடம் கேஜ்ரிவால் ஆசி பெற்றார்.

புதுடெல்லி: உச்ச நீதிமன்றம் அளித்த இடைக்கால ஜாமீன் முடிவடைந்ததால், திகார் சிறையில் டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் நேற்று சரணடைந்தார்.

மதுபான கொள்கை ஊழல் வழக்கில், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை அமலாக்க துறை கைது செய்து திஹார் சிறையில் அடைத்தது. மக்களவை தேர்தலை முன்னிட்டு, தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கேஜ்ரிவால் மனு செய்தார்.

இதையடுத்து அவருக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. ஜுன் 2-ம் தேதி திஹார் சிறையில் மீண்டும் சரணடையவேண்டும் எனவும் அவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மருத்துவ பரிசோதனைகளுக்காக இடைக்கால ஜாமீனை நீட்டிக்க வேண்டும்என கேஜ்ரிவால் மனு தாக்கல்செய்தார். இதற்கு அமலாக்கத் துறை கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இதன் விசாரணையை வரும் 5-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. இதனால் கேஜ்ரிவால்திஹார் சிறையில் நேற்று சரணடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதனால் அவர் நேற்று காலை தனது பெற்றோரிடம் ஆசி பெற்றுதிஹார் சிறைக்கு சென்றார். வீட்டிலிருந்து நேராக மகாத்மா காந்தி நினைவிடமான ராஜ்காட்டுக்கு சென்று மரியாதை செலுத்தினார். அதன்பின் ஆம் ஆத்மி கட்சி தலைமை அலுவலகத்துக்கு சென்றார்.

அங்கு தொண்டர்களிடம் பேசியஅர்விந்த் கேஜ்ரிவால், ‘‘கடந்த 21 நாட்களில் நான் ஒரு நிமிடத்தைக் கூட வீண் செய்யவில்லை. அனைத்துக் கட்சிகளுக்காகவும் பிரச்சாரம்செய்தேன். நாட்டை காப்பாற்ற பிரச்சாரம் செய்தேன். நாடுதான் முக்கியம். ஆம் ஆத்மி கட்சி 2-வதுதான். இடைக்கால ஜாமீன் முழு பலன் அளித்தது. இதற்காக உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி. இந்த அனுபவம் மறக்க முடியாதது’’ என்றார்.

அதன்பின் திஹார் சிறைக்கு சென்று கேஜ்ரிவால் ஆஜரானார்.