புகையிலையால் கருகும் பிஞ்சுகளின் எதிர்காலம்


அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் விற்கப்படும் சிகரெட்டுகளுக்கான புகையிலை, ஏழை நாடுகளின் குழந்தைத் தொழிலாளர்களால் பக்குவப்படுத்தப்படுகின்றன.

உலகின் பல நாடுகளில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் புகையிலைப் பக்குவப்படுத்தும் தொழிலில் அதிகம் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதை தி கார்டியன் இதழ் புலனாய்வு செய்து அம்பலப்படுத்தியுள்ளது. அதுவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் அதிகளவில் குழந்தைத் தொழிலாளர்கள் புகையிலைத் தொழிலில் ஈடுபடுகிறார்கள். இவர்களின் உழைப்பில் சிகரெட் விற்பனையில் ஈடுபட்டிருக்கும்  பன்னாட்டு நிறுவனங்கள் கோடிகளில் கொழித்துவருகின்றன.

ஆனால், இந்தப் புகையிலைத் தொழிலில் ஈடுபடும் குழந்தைகளோ கல்வி பயில வேண்டிய வயதில் கல்வியை இழப்பதோடு மட்டுமல்லாமல் மிக அபாயகரமான சூழலில் வேலை பார்ப்பதால், வாழ்நாள் முழுவதும் நீளும் நோய்களுக்கும் ஆளாகின்றனர். சிலர்  இளம் வயதிலேயே இறக்கவும் நேரிடுகிறது.

மூன்றாம் உலக நாடுகளில், ஏழை விவசாயிகள் வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்த வழியின்றி தங்கள் குழந்தைகளையும் இதுபோன்ற தொழில்களில் ஈடுபடுத்துகின்றனர். மேலும், புகையிலைத் தோட்டங்களின் உரிமையாளர்களுக்கும் அதன் தயாரிப்பில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் மிகக் குறைந்த வருமானமே கிடைக்கிறது. எனவேதான், அவர்கள் குழந்தைகளையும் இந்தத் தொழிலில் ஈடுபடுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக கார்டியனின் ஆய்வு சொல்கிறது.

x