பொது தேர்வில் அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி: தலைமை ஆசிரியர்களுக்கு மாநில அளவில் பாராட்டு விழா


சென்னை: பொதுத் தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும்,தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு மாநில அளவில் சீர்மிகு பாராட்டுவிழா நடத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித் துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் பொதுத் தேர்வு முடிவுகள் பிளஸ் 2 வகுப்புக்கு கடந்த மே 6-ம் தேதியும், 10-ம் வகுப்புக்கு மே 10-ம் தேதியும் வெளியானது. இந்த தேர்வுகளை எழுதிய மாணவர்களில் பிளஸ் 2தேர்வில் 94.56 சதவீதமும், 10-ம் வகுப்பில் 91.55 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதேபோல், நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகள் எண்ணிக்கை பிளஸ் 2-வில் 397 ஆகவும், 10-ம் வகுப்பில் 1,364 ஆகவும் உள்ளது. மொத்தம் 1,761 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சிபெற்றிருப்பது வரலாற்று சாதனையாகும். இது பள்ளிக்கல்வித் துறை வரலாற்றில் மேலும் ஒரு மைல் கல்லாகும்.

அதன்படி 100 சதவீதம் தேர்ச்சிபெற்ற 1,761 அரசுப் பள்ளிகளைச்சார்ந்த தலைமை ஆசிரியர்கள், மாணவர்கள், உயர் அலுவலர்களை அழைத்து பள்ளிக்கல்வித் துறை சார்பில் முதல்முறையாக சீர்மிகு பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது. இந்த விழாவில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்த 43 மாணவர்களும் கவுரவிக் கப்பட உள்ளனர்.

இதுதவிர விழாவின்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்ததேர்ச்சி விகிதம் பெற்ற பள்ளிகளின் 5 தலைமை ஆசிரியர்கள் அழைக்கப்பட்டு, அவர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட இருக்கிறது. மேலும், 100 சதவீதம்தேர்ச்சியை எட்டிய தலைமை ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் செய்து கருத்துகள் பரிமாற்றத்துக்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இது அவர்களுக்கு மேலும் உத்வேகத்தை கொடுக்கும். ஒவ்வொரு ஆண்டும் 100 சதவீத தேர்ச்சி இலக்கை அரசுஉயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள்எட்டவும் வழிவகை செய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்குமுன் நூறு சதவீத தேர்ச்சிபெற்ற அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவில் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டு வந்தன. ஆனால், இம்முறை மாநில அளவில் விழாவாக நடத்தப்பட உள்ளது குறிப் பிடத்தக்கது.

ஆசிரியர்கள் அதிருப்தி: இதற்கிடையே சீர்மிகு பாராட்டு விழாவின் குறைந்த தேர்ச்சி விகிதம்பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை அழைத்து பேசுவதற்கு ஆசிரியர்களிடம் அதிருப்தி எழுந்துள்ளது. தனிப்பட்ட முறையில் அழைத்து அறிவுறுத்துவதை விடுத்து பொது வெளியில் பேசுவதுதேவையற்ற மன உளைச்சலை ஏற்படுத்தும்.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் வெவ்வேறு சூழல்களில் இருந்து படிக்க வருபவர்கள். குடும்பச்சூழல், தீய பழக்கங்கள் என பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் மாணவர்களை பள்ளிக்குவரவழைப்பதே பெரும் சவாலாகஉள்ளது.

மேலும், ஒவ்வொரு பள்ளிக்கான புறச்சூழலும் மாறுபடும். அதை கவனத்தில் கொள்ளாமல் கூடுதல் மனஅழுத்தத்தை வழங்குவது ஏற்புடையதல்ல என்று ஆசிரியர்கள், கல்வியாளர்கள் தெரிவித் தனர்.