சென்னை: பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு நாளை (பிப்ரவரி 7) தொடங்கி பிப்ரவரி 14ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மார்ச் 3 முதல் ஏப்ரல் 15ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பொதுத் தேர்வு எழுதவுள்ள பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் நாளை (பிப்ரவரி 7) தொடங்கி பிப்ரவரி 14ம் தேதி வரை நடைபெறவுள்ளன. மாநிலம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேலான மேல்நிலை பள்ளிகளில் பயிலும் சுமார் 6 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வில் பங்கேற்க இருக்கின்றனர்.
இதற்காக அனைத்து பள்ளிகளிலும் செய்முறைத் தேர்வுக்கு தேவையான ஆய்வகப் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அதன்படி தேர்வுத் துறை வழங்கியுள்ள வழிமுறைகளை பின்பற்றி, பாடவாரியாக அட்டவணை தயாரித்து எவ்வித குளறுபடியுமின்றி பிப்ரவரி 14ம் தேதிக்குள் செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும். ஒரு சுற்றுக்கு அதிகபட்சம் 25 முதல் 30 மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
சலுகை அறிவித்த மாணவ, மாணவிகளுக்கு மட்டும் செய்முறைத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். மேலும், தேர்வில் ஏதேனும் புகார்கள் கிடைக்கப் பெற்றால் சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் பொறுப்பேற்க நேரிடும். எனவே, கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பன உட்பட பல்வேறு அறிவுறுத்தல்களை தேர்வுத் துறை வழங்கியுள்ளது.