சேலம்: சேலம் பெரியார் பல்கலை கழகம் வெளியிட்டுள்ள, முனைவர் பட்ட படிப்புக்கான கையேட்டில், புதிய கல்விக் கொள்கையை மறைமுகமாக அமல்படுத்திட முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய மாணவர் சங்கம், திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்டவை எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்திய மாணவர் சங்கம் மாவட்டச் செயலாளர் பவித்ரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில், முனைவர் பட்டம் பெறுவதற்கான அடிப்படை கல்வித் தகுதி என தமிழகத்தில் இதுவரையில் 10-ம் வகுப்பு, பிளஸ் 2, இளங்கலை, முதுகலை என்ற தகுதி நிர்ணயமே நடைமுறையில் இருக்கிறது. இந்தநிலையில், பெரியார் பல்கலைக் கழகத்தின் முனைவர் பட்ட படிப்புக்கான கல்வித் தகுதியில், 10-ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் 4 ஆண்டு இளங்கலை பட்டம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது மத்திய அரசின் கல்வி கொள்கையை மறைமுகமாக அறிமுகப்படுத்தும் முயற்சியாகும்.
தமிழக அரசு, புதிய கல்விக் கொள்கைக்கு அனுமதி அளிக்கப்படாமல், அதனை எதிர்த்து வரும் நிலையில், பெரியார் பல்கலை கழகம் மட்டும் யு.ஜி.சி.-யின் அறிவிப்பை சுட்டிக்காட்டி முனைவர் பட்டத்துக்கான கல்வித் தகுதியை நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதனால், தமிழக மாணவர்கள் முனைவர் பட்டம் பெற 17 ஆண்டுகள் கல்வித்தகுதி என்றும், புதிய கல்வி கொள்கையை ஏற்று கொண்டுள்ள மாநிலங்களின் மாணவர்களுக்கு 16 ஆண்டுகள் கல்வி தகுதி போதும் என்ற நிலை உருவாகும். எனவே, இந்த அறிவிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
திராவிடர் விடுதலைக் கழகம் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சேலம் பெரியார் பல்கலைக் கழகம் அண்மையில் வெளியிட்ட முனைவர் பட்ட சேர்க்கை வழிகாட்டியில், முனைவர் பட்ட படிப்பில் சேர அடிப்படை கல்வி தகுதியாக 10+2+3+2 அல்லது 12+1+3+2 அல்லது 10+2+4 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின்படி, இளநிலைப் பட்டப் படிப்பு 3 ஆண்டுகளுக்கு பதிலாக 4 ஆண்டுகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதை பெரியார் பல்கலைக் கழகம் தனது முனைவர் பட்ட சேர்க்கை வழிகாட்டியில் சேர்த்துள்ளது.
மேலும், முதுநிலை பட்டப் படிப்பை முனைவர் பட்டத் தகுதியில் இருந்து நீக்கி உள்ளது. இது பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டலில் உள்ளது. அதாவது முதுநிலைப் பட்டப் படிப்பு இல்லாமலும் முனைவர் பட்டப் படிப்பில் சேரலாம்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு, தமிழக அரசு ஒப்புதல் கொடுக்காத நிலையில் பெரியார் பல்கலைக் கழகம் மட்டும் புதியக் கல்விக் கொள்கையை மறைமுகமாக செயல்படுத்த முயல்வது கண்டனத்துக்குரியது. எனவே, பெரியார் பல்கலைக் கழகத்தின் புதிய வழிகாட்டும் நெறிமுறைகளை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.
தமிழகத்தில், உயர் கல்வி படிக்கும் மாணவர்கள் 10+2+3+2 என 17 ஆண்டுகளில் தான் முனைவர் பட்டத்தில் சேரமுடியும். ஆனால், புதிய கல்விக் கொள்கையில் படிக்கும் மாணவர்கள் 10+2+4 என 16 ஆண்டுகளில் முனைவர் பட்டத்தில் சேரலாம். இதனால் தமிழகத்தில் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். மேலும் 2 ஆண்டு முதுநிலையில் ஒரு குறிப்பிட்ட பாடங்களை மட்டும் படித்துத் தேர்வு ஆவதால், நமது மாணவர்களின் கல்வித் தரமானது புதிய கல்விக் கொள்கையின் கீழ் படித்த மாணவர்களின் கல்வித் தரத்தை விட கூடுதலாக இருக்கும்.
தமிழக அரசின் கொள்கை முடிவுக்கு எதிராக புதிய கல்விக் கொள்கையை மறைமுகமாகத் திணிக்கும் சேலம் பெரியார் பல்கலைக்கழகத் துணை வேந்தர், பதிவாளர் உள்பட நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.