வரும் கல்வியாண்டு முதல் ‘எமிஸ்’ பணிகளில் இருந்து ஆசிரியர்கள் விடுவிப்பு


சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியர்கள், வரும்கல்வியாண்டு முதல் ‘எமிஸ்’ வலைதளப் பணிகளில் இருந்து விடுவிக்கப்பட இருப்பதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பள்ளிக்கல்வி மேம்பாட்டுக்காக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே பள்ளிக்கல்வித் துறையின் கல்வி மேலாண்மை தகவல் முகமை(எமிஸ்) எனும் இணையதளத்தில் அரசு, அரசு உதவி, தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் முழு விவரங்கள் பராமரிக்கப்பட்டு, அதற்கேற்ப நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த ‘எமிஸ்’ தளத்தில் தகவல்கள் பதிவேற்றம், நீக்கம்உட்பட பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருவது ஆசிரியர்களுக்கு கூடுதல் பணிச்சுமையாக இருப்பதால் இதிலிருந்து விடுவிக்கவேண்டுமென ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரசின் அறிவிப்புகள், திட்டங்களை பெற்றோருக்கு பகிர்வதற்காக வாட்ஸ்-அப் வழியாக ஒரு தளத்தை உருவாக்க பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக ‘எமிஸ்’ தளத்தில்உள்ள மாணவர்களின் பெற்றோர்தொடர்பு எண்கள் தற்போது ஆசிரியர்கள் மூலம் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. ஆனால் சில பிரச்சினைகளால் இந்தப் பணிகளை முடிக்க முடியாமல் ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர்.

இதையடுத்து, பெற்றோர் செல்போன் எண் சரிபார்ப்பு பணியை கைவிட வேண்டுமென தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘எமிஸ் தளத்தில் விவரங்களைப் பதிவிடுவதற்கான பணிகளில் ஆசிரியர்கள் இனி ஈடுபடுத்தப்பட மாட்டார்கள். இதற்காக வரும் கல்வியாண்டில் ஒப்பந்தஅடிப்படையில் 6 ஆயிரம் அலுவலக உதவியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர், அவர்கள் ‘எமிஸ்’தளத்தில் தரவுகளைப் பதிவு செய்யும் பணிகளை மேற்கொள்வார்கள். பெற்றோர்களின் செல்போன் எண் சரிபார்ப்பு பணிகளில் உள்ள நடைமுறை சிரமங்களைத் தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்