மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.யில் அக்.26-ல் 31-வது பட்டமளிப்பு விழா


திருநெல்வேலி: திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 31-வது பட்டமளிப்பு விழா நாளை மறுநாள் (26-ம் தேதி) நடைபெறுகிறது. இந்த விழாவில் 571 மாணவ - மாணவியருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் பட்டங்களை வழங்குகிறார்.

இது தொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர் ந.சந்திரசேகர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 31-வது பட்டமளிப்பு விழா நாளை மறுநாள் காலை 10 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள வ.உ.சி.கலையரங்கில் நடைபெற உள்ளது.

இந்த விழாவுக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமையேற்று மாணவ - மாணவியருக்கு பட்டங்களை வழங்கவுள்ளார். விழாவில் பல்கலைக்கழக இணைவேந்தரும், தமிழக உயர்கல்வித் துறை அமைச்சருமான முனைவர் கோவி. செழியன் பங்கேற்று சிறப்பிக்கிறார்.

திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள தேசிய புவியறிவியல் ஆய்வு மையத்தின் இயக்குநர், பேராசிரியர் என்.வி. சலபதி ராவ் பட்டமளிப்பு விழா பேருரையாற்றுகிறார். பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 571 மாணவ - மாணவியருக்கு தமிழக ஆளுநர் நேரில் பட்டங்களை வழங்குகிறார்.

அதில் 111 பேர் (மாணவர்கள் 14, மாணவிகள் 97) தங்கப்பதக்கமும், 460 பேர் (மாணவர்கள் 83, மாணவிகள் 377) முனைவர் பட்டங்களும் பெறவிருக்கின்றனர். தமிழக அளவில் மிக அதிகமாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டில் 377 ஆய்வு மாணவியர் முனைவர் பட்டம் பெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழக கணிதத் துறையில் பயின்ற மாணவர் ஜெஸ்வின் டைட்டஸ் கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு பாடங்களில் முதலிடம் பெற்று, இரண்டு பல்கலைக்கழக தங்கப்பதக்கம் பெறுகிறார். இப்பட்டமளிப்பு விழாவில் மொத்தமாக 33,821 பேர் பட்டம் பெறுகிறார்கள். அதில் 571 பேர் நேரில் பட்டங்களை பெறுகிறார்கள். 33,250 பேர் நேரில் கலந்து கொள்ளாமல் பட்டங்களை பெறுகிறார்கள்.

பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக தமிழக ஆளுநர் நாளை மாலை திருநெல்வேலிக்கு வருகிறார். பல்கலைக்கழகத்தில் தங்கும் அவர் நாளை மறுதினம் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மாணவர்களைவிட மாணவியர் அதிகளவில் பயில்கிறார்கள். இந்த பட்டமளிப்பு விழாவில் மாணவியர் அதிகளவில் பட்டம் பெறுகிறார்கள்.'' இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் ஜே. சாக்ரடீஸ், தேர்வாணையர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.

x