சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்கள் 97 பேருக்கு இடம்: இன்று பொது பிரிவு கலந்தாய்வு


கோப்புப்படம்

சென்னை: சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் தொடங்கியது. சிறப்பு பிரிவில் 11 இடங்களும், 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின்கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 97 இடங்களும் நிரம்பின. பொது பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

தமிழகத்தின் இந்திய மருத்துவம் - ஓமியோபதி துறையின்கீழ் சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவ கல்லூரி, யுனானி மருத்துவ கல்லூரி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவ கல்லூரி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஓமியோபதி மருத்துவ கல்லூரி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த கோட்டாறில் ஆயுர்வேத மருத்துவ கல்லூரி ஆகியவை உள்ளன. இந்த 5 அரசுக் கல்லூரிகளில் உள்ள 330 இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் வழங்கப்படுகிறது. எஞ்சியுள்ள 280 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன.

இதேபோல, 30 தனியார் கல்லூரிகளில் உள்ள 1,980 இடங்களில் 15 சதவீதம் அகிலஇந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. எஞ்சிய இடங்களில் மாநில அரசுக்கு 65 சதவீதம், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 35 சதவீதம் உள்ளன. அரசு ஒதுக்கீடு இடங்கள், தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீடு இடங்கள் மற்றும் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு மாநில அரசு கலந்தாய்வு நடத்தி வருகிறது. அரசு கல்லூரிகளின் 15 சதவீத இடங்களுக்கு மட்டும் மத்திய அரசு கலந்தாய்வு நடத்துகிறது.

சித்தா (பிஎஸ்எம்எஸ்), ஆயுர்வேதா (பிஏஎம்எஸ்), யுனானி (பியுஎம்எஸ்), ஓமியோபதி (பிஎச்எம்எஸ்) ஆகிய பட்டப் படிப்புகளுக்கு 2024-25-ம் கல்வி ஆண்டுமாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு, நீட் தேர்வில் தேர்ச்சிபெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியான மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், சென்னை அரும்பாக்கம் சித்தா மருத்துவமனை வளாகத்தில் கலந்தாய்வு நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று, மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் ஆகிய சிறப்பு பிரிவினர் மற்றும் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின்கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெற்றது. இதில், 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின்கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 97 இடங்களும் நிரப்பப்பட்டன. அதேபோல, முன்னாள்ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் பிரிவுக்குஒதுக்கப்பட்ட தலா 5 இடங்களும்நிரம்பின. மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த 17 இடங்களில் ஒரு இடம் மட்டும் நிரப்பப்பட்டதால், எஞ்சிய 16 இடங்கள் பொது பிரிவுக்கு மாற்றப்பட்டன.

பொது பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று (அக்.22) தொடங்கி, 29-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுகுறித்து மேலும் விவரங்களை www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத் துறை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்

x