பருவமழை காலத்தில் பள்ளி கட்டிடங்கள், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவு


சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பள்ளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது.

இக்கூட்டத்துக்கு தலைமை வகித்த பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ், அதிகாரிகளுக்கு வழங்கியுள்ள அறிவுறுத்தல்கள் விவரம்: பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், அனைத்துவித பள்ளிகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மாணவர்களின் பாதுகாப்பு குறித்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

அதை பின்பற்றி, பள்ளிகளின் பாதுகாப்பை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். நீர்நிலைகள், தண்ணீர் அதிகம் தேங்கியுள்ள பகுதிகளுக்கு மாணவர்கள் செல்லாமல் இருக்க பெற்றோர், ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும். பொதுப்பணி துறை மூலம் பழைய கட்டிடங்களை அகற்றும் பணிகளை துரிதப்படுத்தி, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பழைய, பழுதடைந்த கட்டிடங்களை பயன்படுத்தக் கூடாது.

மக்கள் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ள நிலையில், பள்ளி கட்டிடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதா, பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்று தீவிரமாக கண்காணித்து, பள்ளிகள், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். இவ்வாறு அமைச்சர் உத்தரவிட்டார்.

பள்ளிக்கல்வி துறை செயலர் சோ.மதுமதி, இயக்குநர் ச.கண்ணப்பன், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் மா.ஆர்த்தி, தொடக்க கல்வி இயக்குநர் பூ.ஆ.நரேஷ் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

பின்னர், சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் அரசு மாதிரிபெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.

x