பள்ளி மாணவர்களுக்கான கலைத் திருவிழா போட்டிகள் - திருத்தப்பட்ட கால அட்டவணை வெளியீடு


பிரதிநிதித்துவப்படம்

சென்னை: தொடர் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கலைத் திருவிழா போட்டிகளுக்கான திருத்தப்பட்ட கால அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 2022-ம் ஆண்டு முதல் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதன் தொடர்ச்சியாக நடப்பு கல்வியாண்டிலும் 1-ம் வகுப்பு தொடங்கி பிளஸ் 2 வரை அனைத்து மாணவர்களுக்கும் கலைத் திருவிழா போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 22 மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இவற்றில் மாறுவேடம், பாடல், நடனம், ஓவியம், கதைக் கூறுதல், பேச்சு உட்பட பல்வேறு போட்டிகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்துகின்றனர்.

இந்நிலையில் பள்ளி அளவிலான போட்டிகள் முடிவுற்றதை அடுத்து குறுவள மற்றும் வட்டாரப் போட்டிகள் அக்டோபர் 14-ம் தேதி முதல் நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது. ஆனால், வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உட்பட மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது. இதனால் கலைத் திருவிழா போட்டிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டன. தற்போது இயல்பு திரும்பியுள்ளதை அடுத்து கலைத் திருவிழா போட்டிக்கான திருத்தப்பட்ட கால அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

அதன்விவரம் பின்வருமாறு:- 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கான குறுவள மையப் போட்டிகள் அக்டோபர் 30-ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும். அந்தப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களின் விவரங்களை அன்று மாலைக்குள் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும். தொடர்ந்து வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகளை நவம்பர் 7-ம் தேதிக்குள் திட்டமிட்டு நடத்த வேண்டும். அதில் வென்ற மாணவர்களின் விவரங்களை நவம்பர் 8-ம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை முறையாக மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

x