கேட் நுழைவு தேர்வுக்கு விண்ணப்பம்: அக்.3 வரை கால அவகாசம் நீட்டிப்பு


சென்னை: முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான ‘கேட்’நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலஅவகாசம் அக்.3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதுள்ள ஐஐடி உட்பட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர ‘கேட்’ எனும் தேசியநுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. அதேபோல பல்வேறுபொதுத்துறை நிறுவனங்களும் ‘கேட்’ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணிக்கு ஊழியர்களைத் தேர்வு செய்கின்றன.

இந்த ‘கேட்’ நுழைவுத் தேர்வு இயந்திரவியல், கட்டிடவியல் உட்பட 30 பாடப்பிரிவுகளில் கணினி வழியில் நடத்தப்படும். மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் தேர்வு நடைபெறும். தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து 3 ஆண்டுக்கு இந்த மதிப்பெண் செல்லுபடியாகும்.

ரூர்க்கி ஐஐடி: அதன்படி 2025-ம் ஆண்டுக்கான கேட் தேர்வு பிப்ரவரி 1, 2 மற்றும் 15, 16-ம் தேதிகளில் பாடவாரியாக காலை, மதியம் என இருவேளைகளிலும் நடைபெற உள்ளது. இந்த முறை ‘கேட்’ தேர்வை ரூர்க்கி ஐஐடி நடத்தவுள்ளது. மேலும், தேர்வுக்கான மையங்கள் 8 மண்டலங்களாகப் பிரித்து அமைக்கப்பட இருக்கின்றன.

பொறியியல் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.

இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிக்கும் காலஅவகாசம் அக்.3-ம் தேதி வரைநீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் https://gate2025.iitr.ac.in/ எனும் வலைதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த வாய்ப்பை தவறவிடுபவர்கள் தாமதக் கட்டணத்தை செலுத்தி அக்.7-ம்தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும், கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் அறியலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

x