குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்ற சிவகங்கை தூய்மை பணியாளர் மகன்!


மாவட்ட சுற்றுலா அலுவலர் பதவிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்ற காளீஸ்வரனை பாராட்டிய சிவகங்கை நகராட்சித் தலைவர் சிஎம்.துரை ஆனந்த்.

சிவகங்கை: டிஎன்பிஎஸ்சி மூலம் நடத்தப்பட்ட மாவட்ட சுற்றுலா அலுவலருக்கான குரூப் 1 தேர்வில் சிவகங்கை தூய்மைப் பணியாளரின் மகன் தேர்ச்சி பெற்றார். சிவகங்கை மருதுபாண்டியர் நகர் சாலையைச் சேர்ந்தவர் ராமு. நகராட்சி தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.

இவரது மனைவி குருவம்மாள் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகன் காளீஸ்வரன் (33). இவர் மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு வரை படித்தார். மன்னர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வரை படித்தார். மன்னர் துரைசிங்கம் அரசு கல்லூரியில் பிபிஇ முடித்தார்.

காளையார்கோவில் தனியார் கல்லூரியில் எம்பிஏ முடித்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி மூலம் நடத்தப்பட்ட மாவட்ட சுற்றுலா அலுவலர்களுக்கான குரூப் 1 தேர்வை எழுதினார். இதில் தேர்ச்சி பெற்ற அவர், மாவட்ட சுற்றுலா அலுவலராக நியமிக்கப்பட உள்ளார். அவரை சிவகங்கை நகராட்சித் தலைவர் சிஎம்.துரைஆனந்த் பாராட்டினார்.

x