மாவட்ட வேலைவாய்ப்பு மையங்களில் குரூப் 1 தேர்வு இலவச பயிற்சி


சென்னை: குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மைய அலுவலகங்களில் வழங்கப்பட உள்ளன.

இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர்எ.சுந்தரவல்லி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் 38 மாவட்ட வேலைவாய்ப்பு மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி உட்படதேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த பயிற்சி வகுப்புகளில் ஆண்டுதோறும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பலன் பெறுகின்றனர்.

தற்போது டிஎன்பிஎஸ்சி நடத்தவுள்ள குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் அனைத்து மாவட்டங்களில் உள்ள வேலைவாய்ப்பு மைய அலுவலகங்களில் சிறந்தபயிற்றுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது.

அதிக அளவிலான பயிற்சி தேர்வுகளும் மற்றும் மாநிலஅளவிலான மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். இந்த பயிற்சி வகுப்புகளில் அதிக மாணவர்கள் பங்கேற்று தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு வேலையை பெற முன்வர வேண்டும். இதற்கு அந்தந்த மாவட்டத்திலுள்ள வேலைவாய்ப்பு மையங்களை அணுக வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

x