கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு செப்.4 முதல் கலந்தாய்வு: பொது பிரிவு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் நடக்கும்


சென்னை: கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு செப்.4-ம் தேதிதொடங்குகிறது. சிறப்பு பிரிவு மற்றும் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு நேரடியாகவும், பொதுப் பிரிவினருக்கு ஆன்லைன் வாயிலாகவும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்) 660 இடங்கள் இருக்கின்றன. இதில் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய 4 கல்லூரிகளில் உள்ள 420 இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 63 இடங்கள் (15 சதவீதம்) ஒதுக்கப்படுகின்றன. தமிழகத்துக்கு 597 இடங்கள் உள்ளன.

திருவள்ளூர் மாவட்டம் கோடுவேளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்.) 40 இடங்கள், பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்.) 20 இடங்கள் இருக்கின்றன. இதில், உணவுத் தொழில்நுட்ப படிப்பில் 6 இடங்கள் மற்றும் பால்வளத் தொழில்நுட்ப படிப்பில் 3 இடங்கள் ஆகியவை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது.

இதேபோல், ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்.) 40 இடங்கள்உள்ளன. இந்த 3 பட்டப்படிப்புகளும் 4 ஆண்டு கால படிப்பாகும்.பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் மற்றும்பி.டெக். படிப்புகளுக்கு 2024- 25-ம்ஆண்டுக்கான கலந்தாய்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது கடந்த ஜூன் 3-ம் தேதி தொடங்கியது. கடந்த 28-ம் தேதி நிறைவடைந்தது.

17,497 பேர் விண்ணப்பம்: இதன்படி பி.வி.எஸ்சி.- ஏ.ஹெச்.படிப்புக்கு 14,497 பேரும், பி.டெக்.படிப்புகளுக்கு 3,000 பேரும் எனமொத்தம் 17,497 பேர் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யும் பணிகள் நிறைவடைந்ததும், கடந்த 7-ம் தேதி தரவரிசைப் பட்டியல்கள் வெளியிடப்பட்டன. இதில் 15 பேர் கட்-ஆப் மதிப்பெண் 200-க்கு 200 பெற்று முன்னிலை பெற்றுள்ளனர்.

மேலும் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு பி.வி.எஸ்சி.- ஏ.ஹெச். படிப்பில் 45 இடங்களும், உணவுத் தொழில்நுட்ப படிப்பில் 3 இடங்களும், பால்வளத் தொழில்நுட்ப படிப்பில் 2 இடங்களும், கோழியின தொழில்நுட்பபடிப்பில் 3 இடங்களும் எனமொத்தம் 53 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இப்படிப்புகளுக்கான கலந்தாய்வு செப். 4-ம் தேதி தொடங்குகிறது.

இதுதொடர்பாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் மற்றும் பி.டெக். படிப்புகளுக்கு சிறப்பு பிரிவினருக்கான (மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள்) கலந்தாய்வு செப்.4-ம் தேதி நடைபெறுகிறது. 7.5 சதவீத உள் இடஒதுக்கீடின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு 5-ம் தேதி நடைபெறவுள்ளது. பி.டெக். படிப்புகளுக்கான முதல்சுற்று கலந்தாய்வு 6-ம் தேதி நடைபெறுகிறது. இந்த கலந்தாய்வுகள் அனைத்தும் நேரடியாக சென்னை வேப்பேரியில் உள்ள சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெறும். கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் ஒரு மணி நேரம் முன்னதாகவே வரவேண்டும்.

7-ம் தேதி வரை பதிவு: பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் படிப்புக்கு பொதுப் பிரிவுக்கான முதல்சுற்று கலந்தாய்வு www.adm.tanuvas.ac.in, www.tanuvas.ac.in என்ற இணையதளம் மூலமாகஆன்லைனில் நடைபெற இருக்கிறது. அதற்கான பதிவு மற்றும் கல்லூரி வளாக விருப்பத்தை செப்.4-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம். இடஒதுக்கீடு மற்றும் இடஒதுக்கீட்டுக்கான கடிதம் செப்.11-ம் தேதிஇணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழகத்தின் இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

x