குமரி தனியார் கல்லூரியின் 100 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டதால் திருத்தப்பட்ட பட்டியல் வெளியீடு


சென்னை: கன்னியாகுமரி மெடிக்கல் மிஷன்ஆராய்ச்சி மையம் கல்லூரியின் 100 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டதால், அங்கு தற்காலிகமாக செய்யப்பட்ட இடஒதுக்கீட்டை ரத்து செய்து, திருத்தப்பட்ட இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் அரசு, தனியார் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான ஆன்லைன் பொதுகலந்தாய்வு கடந்த 21-ம்தேதி தொடங்கியது. அரசு ஒதுக்கீட்டு தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 28,819 பேரும், நிர்வாகஒதுக்கீட்டு தரவரிசையில் இடம்பெற்றுள்ள 13,417 பேரும் ஆன்லைனில் பதிவு செய்து, கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்வது கடந்த 27-ம் தேதி மாலையுடன் நிறைவடைந்தது.

தொடர்ந்து, தற்காலிக இடஒதுக்கீடு விவரங்கள் நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டன. இந்நிலையில், இறுதி இடஒதுக்கீடு விவரங்கள் https://tnmedicalselection.net/ என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 30-ல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், தமிழக அரசின்மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்துக்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுப்பிய நேற்று கடிதத்தில், “கன்னியாகுமரி மெடிக்கல் மிஷன் ஆராய்ச்சி மையம் கல்லூரி வளாகம் அமைந்துள்ள நிலத்துக்கு உரிமை கோரி மனுதாரர் ஒருவர், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதால், அக்கல்லூரிக்கு அனுமதிக்கப்பட்ட 100 எம்பிபிஎஸ் இடங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. அதனால், அந்தக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடத்தவேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ஏற்கெனவே அந்தக் கல்லூரியின் 95 இடங்கள் தற்காலிக ஒதுக்கீடாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. மேலும், 5இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவுறுத்தலின்பேரில் 95 இடங்கள் திரும்பப் பெறப்பட்டு, புதிய இறுதி ஒதுக்கீட்டுப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

அதேநேரம், அரசுப் பள்ளிமாணவர்கள் 5 பேருக்கு வேறுகல்லூரிகளில் இடங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதி ஒதுக்கீடு பெற்றவர்கள், செப். 5-ம்தேதி மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் சேர்ந்துவிட வேண்டும் என்று மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக் குழு தெரிவித்துள்ளது.

x