“நாட்டுக்கே தமிழக கல்வி முறைதான் முன்மாதிரி” - சபாநாயகர் அப்பாவு பெருமிதம்


திருநெல்வேலி: தமிழக கல்விமுறை நாட்டுக்கே முன் மாதிரியாக திகழ்வதாக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு கூறியுள்ளார்.

பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் நடைபெற்ற நவீன வேளாண் இயந்திரங்களை கையாளுதல் மற்றும் பராமரித்தல் பயிற்சியை தொடங்கி வைத்த அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: "தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்து 3 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு ஏராளமான திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. 24 லட்சம் விவசாயிகள் அரசின் இலவச மின்சார திட்டத்தில் பலன் பெறுகிறார்கள். இதற்காக அரசு ரூ.5,740 கோடி செலவு செய்கிறது.

விவசாயப் பணிகளுக்கு ஆள் பற்றாகுறை இருப்பதால் இயந்திரமயம் கட்டாயமாகியுள்ளது. உழவு , நடுகை, அறுவடை உள்ளிட்ட பணிகளுக்கு இயந்திரம் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. அதற்கான பயிற்சி மற்றும் பராமரிப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வேளாண் கருவிகளுக்காக ரூ.2.93 கோடி மானியமாக திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

குற்றங்கள் இல்லாத பள்ளிகள் தமிழகத்தில் மட்டும்தான் உள்ளன. பாலியல் ரீதியான பிரச்சினைகள் தமிழகத்திலும் தொடர்கிறது என்று பொதுவாக சொல்லக் கூடாது. அங்கொன்றும் இங்கொன்றும் பிரச்சினைகள் இருக்கலாம். குற்றம் செய்பவர்கள் மீது எந்த வித பாகுபாடும் இல்லாமல் கடுமையான நடவடிக்கை அரசால் எடுக்கப்படும். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கல்வி சிறப்பாக உள்ளது.

தமிழகத்தின் கல்விமுறைதான் நாட்டுக்கே முன்மாதிரியான கல்வி முறையாக உள்ளது. ஜிஎஸ்டி வருவாயில் 50 சதவீதம் மத்திய அரசுக்கும், 50 சதவீதம் மாநில அரசுக்கும் வரியாக பெறப்படுகிறது. மத்திய அரசின் பங்கில் இருந்து மாநிலங்களுக்கு 21 சதவீதம் பகிர்ந்து அளிக்கும் நடைமுறை இருந்து வருகிறது.

மத்திய அரசுக்கு கொடுக்காமல் மாநிலங்களே அந்த 21 சதவீதத்தையும் நேரடியாக வைத்துக் கொண்டால் மக்கள் நல திட்டங்களுக்கு எளிதில் பயன்படுத்த முடியும். மத்திய அரசை எதிர்பார்த்து காத்திருக்கும் சூழல் ஏற்படாது. மத்திய அரசு செய்யும் கடன் தள்ளுபடிகள் அனைத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கே செய்யப்படுகிறது. நலிந்தவர்களுக்கு கடன் தள்ளுபடி இல்லாத நிலை இருந்து வருகிறது" என்று சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கூறினார்.

x