சிவகங்கை: எஸ்.புதூர் அருகே இடிந்துவிழும் நிலையில் அரசுப் பள்ளி - அச்சத்தில் மாணவர்கள்


வேலம்பட்டியில் சேதமடைந்த ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகட்டிடம்.

சிங்கம்புணரி: எஸ்.புதூர் அருகே அரசு பள்ளி இடியும் நிலையில் உள்ளதால் மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே உரத்துப்பட்டி ஊராட்சி வேலம்பட்டியில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி உள்ளது. அங்கு அப்பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

ஓட்டு கட்டிடத்தில் இயங்கும் இப்பள்ளி பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி உள்ளது. இதனால் கட்டிடம் முற்றிலும் சேதமடைந்துள்ளது. மேற்கூரை ஓடுகள் உடைந்துள்ளதால், மழைக்காலத்தில் தண்ணீர் ஒழுகுகிறது. கதவுகளும் சேதமடைந்து ஓட்டையாக உள்ளது. இதனால் அச்சத்துடன் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

மேலும் அங்குள்ள கழிப்பறை களும் பயன்படுத்த முடியாதபடி மிக மோசமாக உள்ளன. இதனால் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். மாவட்டத்தின் கடைக்கோடியில் அமைந்துள்ள இப்பள்ளிக்கு குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை.

இதனால் போதிய அடிப்படை வசதிகளுடன் புதிய பள்ளிக் கட்டிடம் கட்டித் தர வேண்டுமென மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.

x