இக்னோ பல்கலை. மாணவர் சேர்க்கை ஆக.31-ம் தேதி வரை நீட்டிப்பு


சென்னை: இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் கே.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மத்திய அரசு பல்கலைக்கழகமான இக்னோ, தொலைதூரக்கல்வி வாயிலாக பல்வேறு பாடப்பிரிவுகளில் இளங்கலை, முதுகலை, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது. தற்போது மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு, பல்கலைக்கழகத்தின் ஜூலை பருவ சேர்க்கைக்கான கடைசி நாள் ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, தொலைதூரக்கல்வி படிப்புகளில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவர்கள் https://ignouadmission.samarth.edu.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பித்து சேரலாம். மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.ignou.c.in) விரிவாக அறிந்துகொள்ளலாம். மேலும், இக்னோ சென்னை மண்டல அலுவலகத்தை 044-26618040 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.

இக்னோ பல்கலைக்கழகத்தில் பிஏ, பிகாம், பிஎஸ்சி படிப்புகளில் சேரும் தகுதியுடைய எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது. எனவே, தகுதியுள்ள எஸ்சி, எஸ்டி மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

x