பள்ளி மேலாண்மை குழுக்கள் மறுகட்டமைப்பு: இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களை சேர்க்க உத்தரவு


சென்னை: பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) மறுகட்டமைப்பின்போது, கல்வியாளர் பிரிவின் கீழ் இல்லம் தேடிக்கல்வித் திட்ட தன்னார்வலர்களை தேர்வு செய்ய வேண்டும்என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) 2022-ம் ஆண்டுமறுகட்டமைப்பு செய்யப்பட்டன. அதன்படி, பெற்றோர் உட்பட 20 உறுப்பினர்கள் கொண்ட குழுவாக எஸ்எம்சி மாற்றி அமைக்கப்பட்டது. அந்தக் குழுக்களின் பதவிக் காலம் கடந்த ஜூலை மாதத்துடன் நிறைவடைந்தது.

இதையடுத்து, 2024-26-ம்ஆண்டுகளுக்கான புதிய தலைவர், உறுப்பினர்களை தேர்வு செய்து, எஸ்எம்சி குழுக்கள் மறுகட்டமைப்பு செய்யப்பட உள்ளன.

முன்னுரிமை அடிப்படையில்.. அந்தவகையில் ஆகஸ்ட் 10, 17-ம் தேதிகளில் தொடக்கப்பள்ளிகள், ஆகஸ்ட் 24-ல் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் ஆகஸ்ட் 31-ம் தேதி நடுநிலைப் பள்ளிகளில் மறுகட்டமைப்பு நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இதில்,கல்வியாளர் பிரிவின் கீழ் முன்னுரிமை அடிப்படையில் இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.

அதன்படி, பள்ளி அமைந்துள்ள அல்லது அங்கு படிக்கும் மாணவர்கள் சார்ந்த குடியிருப்புப் பகுதிகளில் இல்லம்தேடிக் கல்வி தன்னார்வலர்களாக செயல்படுபவர்கள் அல்லது ஏற்கெனவே செயல்பட்டவர்களை கல்வியாளர் என்ற நிலையில் பள்ளி மேலாண்மைக் குழுவில் முன்னுரிமை அடிப்படையில் உறுப்பினராகத் தேர்வு செய்யவேண்டும்.

இந்த வழிகாட்டுதலைப் பின்பற்றி செயல்படுமாறு, அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

x