பச்சையப்பன் அறக்கட்டளை அறங்காவலர் தேர்தலை உடனே நடத்த வேண்டும்: பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்


சென்னை: பச்சையப்பன் அறக்கட்டளை அறங்காவலர் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தமிழ்நாடு துணை தலைவர் பசுபதி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் 6 அரசு உதவி பெறும் கல்லூரிகளும், 6 உதவி பெறும் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. அறக்கட்டளை அறங்காவலர் தேர்தலை நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டது.

மேலும், புதிய அறங்காவலர் குழு தேர்வு செய்யப்படும் வரை நிர்வாகத்தை கவனித்துக்கொள்ள இடைக்கால நிர்வாகியாக ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்தது. உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு 6 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அறங்காவலர் தேர்தல் நடத்தப்படவில்லை. செயலர் பதவியில் இருப்பவரின் பணிக்காலம் ஏற்கெனவே முடிந்துவிட்டது.

ஆனால் விதிமுறைகளை மீறி தொடர்ந்து செயலர் பொறுப்பை அவர் கவனித்து வருகிறார். இத்தகைய சூழலில் புதிதாக 132 உதவி பேராசிரியர்களை நியமிப்பதற்கான முயற்சியில் இடைக்கால நிர்வாகம் இறங்கியுள்ளது. அறங்காவலர் குழுதான் பேராசிரியர்களை நியமிக்க முடியும். இடைக்கால நிர்வாகத்துக்கு அதற்கான அதிகாரமே கிடையாது.

அறங்காவலர் தேர்தல் நடத்தும் பொறுப்பை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்தால் 20 நாட்களில் வாக்காளர் பட்டியல் தயாரித்து தேர்தலை நடத்தி புதிய அறங்காவலர்களைத் தேர்வு செய்ய முடியும். அரசு தன்வசப்படுத்த வேண்டும் செயலர் பதவியில் இருக்கும் துரைக்கண்ணுவால் பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர்களும் மாணவர்களும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

விதிமுறைகளை மீறி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். எனவே, தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் ஒழுங்குமுறை சட்டத்தைப் பயன்படுத்தி பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளை தமிழக அரசு, தன்வசம் எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். துணைத்தலைவர் சாந்தி கூறும்போது, "பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளில் 15 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த தகுதியுள்ள கவுரவ விரிவுரையாளர்களை பணிநீக்கம் செய்துவிட்டு தகுதியில்லாத நபர்கள் கவுரவ விரிவுரையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

உதவி பேராசிரியர் பதவிக்கு முதுகலை பட்டப்படிப்புடன் பிஎச்.டி அல்லது ஸ்லெட், நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே நியமிக்க முடியும். ஆனால், வெறும் முதுகலை படிப்பு படித்தவர்களை நியமித்துள்ளார்" என்று குறிப்பிட்டார். மண்டல செயலர் ராஜா கூறும்போது, "ஒரு காலத்தில் பச்சைப்பன் கல்லூரியில் இடம் கிடைப்பது கடினமான விஷயம்.

ஆனால், நிர்வாகத்தின் கெடுபிடிகள் காரணமாக தற்போது மாணவர் சேர்க்கை 40 சதவீதமாக குறைந்துவிட்டது. எனவே உடனடியாக அறங்காவலர் தேர்தல் நடத்தி அக்குழுவிடம் கல்லூரி நிர்வாகத்தை ஒப்படைக்க வேண்டும்" என்றார்.

x