425 ஆசிரியர் காலிப் பணியிடங்களுடன் எப்படி செயல்படுகிறது?...அண்ணா பல்கலை.க்கு நீதிமன்றம் கேள்வி!


அண்ணா பல்கலைக்கழகம்

425 ஆசிரியர் காலிப் பணியிடங்களுடன் அண்ணா பல்கலைக்கழகம் எப்படி செயல்படுகிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் கடந்த 2010 – 11-ம் ஆண்டுகளில் மாதம் 20 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் பணி நிரந்தரம் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.குமரேஷ்பாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஏஐசிடிஇ விதிப்படி உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், பேராசிரியர் என 1745 ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்றும், 981 பணியிடங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது என அண்ணா பல்கலைகழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றம்

ஒதுக்கப்பட்ட இடங்களில் 556 பேர் மட்டுமே பணியில் உள்ளனர், 425 இடங்கள் காலியாக உள்ளன. ஏஐசிடிஇ விதிமுறைப்படி 1189 காலியாக உள்ளன, வழக்குகள் நிலுவையில் இருந்ததால் காலியிடங்களை நிரப்ப முடியவில்லை என அண்ணா பல்கலைகழகம் தெரிவித்தது.

425 ஆசிரியர் காலிப் பணியிடங்களுடன் பல்கலைக்கழகம் எப்படி செயல்படுகிறது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், காலியிடங்களை நிரப்ப வேண்டுமென்ற உயர் நீதிமன்ற உத்தரவை 3 ஆண்டுகளாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று வினவினர்.

இதற்கு பதிவாளர் அக்டோபர் 5-ம் தேதிக்குள் பதிலளிக்காவிட்டால் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என எச்சரிக்கை விடுத்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கின் விசாரணையை அக்டோபர் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இதையும் வாசிக்கலாமே...

x