தமிழக பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2, 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு புதிய பாட திட்டம்: வரைவு பாடம் இணையத்தில் வெளியீடு


சென்னை: பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதல் ஆண்டை தொடர்ந்து 2-ம்,3-ம் ஆண்டு பாடத்திட்டமும் விரைவில் மாற்றப்படுகிறது. இதற்கானவரைவு பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 491 பாலிடெக்னிக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.இக்கல்லூரிகளில் டிப்ளமா படிப்புகளில், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சேரலாம். அதேநேரத்தில், பிளஸ் 2 முடித்திருந்தால் நேரடியாக 2-ம் ஆண்டு சேர்ந்துவிடலாம்.

பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும் என உயர்கல்வித்துறை கடந்த ஆண்டு அறிவித்திருந்தது. அதன்படி 2023-2024-ம் கல்வி ஆண்டில் முதல் ஆண்டு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், தற்போது 2-ம் ஆண்டு மற்றும் 3-ம் ஆண்டு மாணவர்களுக்கும் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, அந்த இரு ஆண்டுகளுக்கான வரைவு பாடத்திட்டத்தை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தனது இணையதளத்தில் (www.dte.tn.gov.in) வெளியிட்டுள்ளது.

சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான வரைவுபாடத்திட்டம் தொடர்பான கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.

இதன்படி அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் சுயநிதிபாலிடெக்னிக் கல்லூரிகள் மே மாதம் 24-ம் தேதிக்குள் இணையவழியில் கருத்துகளை தெரிவிக்குமாறு மாநில தொழில்நுட்பக்கல்வி ஆணையர் கொ.வீரராகவராவ் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளது.

x