அடுத்த ஆண்டு முதல் பொறியியல் படிப்பில் விளையாட்டு வீரர்களுக்கு 2% ஒதுக்கீடு: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு


சென்னை கிண்டி தொழில்நுட்பக்கல்வி இயக்குநர் அலுவலகத்தில், பொறியியல் படிப்புக்கான சிறப்பு பிரிவு இணையவழி கலந்தாய்வை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி நேற்று தொடங்கி வைத்தார். உடன் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ், உயர்கல்வித் துறை செயலர் பிரதீப் யாதவ் உள்ளிட்டோர். படம்: ம.பிரபு

சென்னை: விளையாட்டு வீரர்களுக்கு பொறியியல் படிப்பில் அடுத்த ஆண்டு முதல் 2 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

பொறியியல் மாணவர் சேர்க்கையில் சிறப்பு பிரிவினருக்கான இணையவழி கலந்தாய்வு நேற்று தொடங்கியது. சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தில் இக்கலந்தாய்வை அமைச்சர் பொன்முடி நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. முதல் நாளில் சிறப்பு பிரிவினரில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

ஜூலை 29 முதல் பொது கலந்தாய்வு: இதில் மாற்றுத் திறனாளிகள் பிரிவின்கீழ் 111 இடங்களும், விளையாட்டு வீரர்கள் பிரிவில் 38 இடங்களும், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள் பிரிவில் 11 இடங்களும் உள்ளன. ஜூலை 29-ம் தேதி முதல் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கும்.

நடப்பு கல்வி ஆண்டில் மொத்தம் 433 பொறியியல் கல்லூரிகளில் இருந்து ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 342 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை, இடங்களின் எண்ணிக்கையை விட குறைவாக இருப்பதால் அனைத்து மாணவர்களுக்கும் இடம் கிடைப்பது உறுதி. அதேநேரம் விருப்பமான கல்லூரி, பிடித்தமான பாடப்பிரிவு கிடைக்குமா? என்பதுதான் சவாலாக இருக்கும்.

அரசு பள்ளியில் படித்து பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு ‘புதுமைப் பெண்’ திட்டத்தின்கீழ் மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு அரசு பள்ளியில் படித்து உயர்கல்வி சேரும் மாணவர்களுக்கு ‘தமிழ்புதல்வன்’ திட்டத்தின் கீழ் மாதம்தோறும் ரூ.1000 வழங்கப்பட உள்ளது.

துணைவேந்தர் நியமன பிரச்சினை: சென்னை பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதற்கு பல்கலைக்கழக விதிமுறைகள் உள்ளன. செனட் உறுப்பினர், தமிழக அரசின் பிரதிநிதி, ஆளுநரின் பிரதிநிதி ஆகியோர் அடங்கிய தேர்தல் குழு அமைக்கப்பட்டு அக்குழு பரிந்துரை செய்யும் ஒருவர் துணைவேந்தராக நியமிக்கப்படுவார். இதுதான் நடைமுறை.

ஆனால், யுஜிசி பிரதிநிதியை சேர்க்க வேண்டும் என்று புதிதாக நிபந்தனை விதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, துணைவேந்தர்களை விரைவில் நியமிப்பதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை செயலர் பிரதீப் யாதவ், தொழில்நுட்பக் கல்வி ஆணையர் ஆபிரகாம், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் புருஷோத்தமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

x