பள்ளி மாறும் மாணவர்களிடம் மாற்று சான்றிதழ் சமர்ப்பிக்க நிர்பந்திக்க கூடாது: உயர் நீதிமன்றம்


கோப்புப்படம்

சென்னை: ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு மாறும் மாணவர்களிடம் மாற்றுச்சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டுமென நிர்பந்திக்கக் கூடாது என அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறி்க்கை பிறப்பிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா காலத்தில் கட்டணம் செலுத்த முடியாமல் தனியார் பள்ளி மாணவர்கள் வேறு பள்ளிகளில் சேர்ந்தனர். இதற்காக, மாற்றுச் சான்றிதழ் கோரியபோது கல்வி கட்டண பாக்கி உள்ளிட்ட காரணங்களைக் கூறி, மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுப்பதாக புகார் எழுந்தது.

அதையடுத்து, மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் மாணவர்களை சேர்த்துக்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்திருந்தனர்.

இதை எதிர்த்து அகில இந்திய தனியார் பள்ளிகள் சட்ட பாதுகாப்புசங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, வேறு பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்கள் தற்போது படிக்கும் பள்ளியிடம் மாற்றுச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்த ஒரு வாரத்தில் மாற்றுச் சான்றிதழ் வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

உரிய நடவடிக்கை எடுக்கலாம்: மேலும், மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்கும் தனியார் பள்ளிகளுக்கு எதிராக முதன்மை கல்வி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித்துறை ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழகஅரசு தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள்எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

இதுதொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மாற்றுச் சான்றிதழ் என்பது மாணவர்களின் தனிப்பட்ட ஆவணம் என்பதால் மாற்று சான்றிதழ் வழங்கும்போது ‘கட்டண பாக்கி உள்ளது' என்றோ, அல்லது 'காலதாமதமாக கட்டணம் செலுத்தியதாகவோ' குறிப்பிட்டு மாணவர்களை மனரீதியாக பாதிப்படைய செய்யக்கூடாது. மாற்றுச் சான்றிதழ் என்பது ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கு மாணவர்கள் சேர்க்கை பெறுவதற்கான ஒரு ஆவணமேயன்றி, அது பெற்றோர்களிடமிருந்து கட்டண பாக்கியை வசூலிக்கும் கருவி அல்ல.

கல்வி உரிமைச் சட்டப்படி மாற்றுச் சான்றிதழ் கட்டாயமல்ல என்பதால், இதுசம்பந்தமான விதிகளில் தமிழக அரசு 3 மாதங்களில் உரிய திருத்தம் மேற்கொள்ள வேண்டும். மேலும் ஒருபள்ளியில் இருந்து மற்றொரு பள்ளியில் சேர்க்கை பெறும் மாணவர்களிடம் மாற்றுச் சான்றிதழை சமர்ப்பிக்கும்படி நிர்பந்திக்கக் கூடாது என தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும்.

மாற்றுச் சான்றிதழ்களில் கட்டண பாக்கி குறித்து குறிப்பிடும் தனியார் பள்ளிகள் மீது சட்டரீதியாக நடவடிக்கைஎடுக்க வேண்டும். அதேநேரம் மாணவர்களின் கல்வி கட்டணத்தை செலுத்த வேண்டியது பெற்றோரின் கடமை. அந்த கட்டண பாக்கியை வசூலிக்க தனியார் பள்ளிகள் தனிப்பட்ட முறையில் நடவடிக்கை எடுக்கலாம். அதற்காக மாற்றுச்சான்றிதழை ஆயுதமாகப் பயன்படுத்தக்கூடாது.

மனரீதியாக பாதிப்பு: மாணவர்கள் எந்த மனக்குறையும் இல்லாமல் கல்வி கற்க அனுமதிக்க வேண்டிய பள்ளிகள், கட்டண பாக்கிக்காக அவர்களை வகுப்புக்கு வெளியே நிற்கச் செய்வது, பலர் முன்னிலையில் எழுந்து நிற்க வைத்து மாணவர்களை மனரீதியாக பாதிப்புக்குள்ளாக்குவது கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் நோக்கத்தையே சிதைத்து விடும். இவ்வாறு உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

x