தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுவது எப்போது? - பள்ளி கல்வி துறை அதிகாரிகள் விளக்கம்


கோப்புப்படம்

சென்னை: கோடை விடுமுறை முடிந்து பின்பு பள்ளிகள் திறப்பது தொடர்பாக இந்த மாத இறுதியில் தான் முடிவெடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

தமிழக பள்ளிக் கல்வியில் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடத்தப்பட்டது. அதேபோல், இந்தாண்டு மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இதர வகுப்புகளுக்கும் வழக்கத்தைவிட முன்கூட்டியே தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன. அதன்படி 1 முதல் 3-ம் வகுப்பு குழந்தைகளுக்கு ஏப்ரல் 2 முதல் 5-ம் தேதி வரையும், 4 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2 முதல் 23-ம் தேதி வரையும் முழு ஆண்டுத் தேர்வுகள் நடைபெற்றன. தொடர்ந்து மாணவர்களுக்கு ஏப்ரல் 24-ம் தேதி தொடங்கி கோடை விடுமுறை விடப்பட்டது.

இதற்கிடையே பள்ளி மாணவர்களுக்கு மே மாதத்தில் கோடை விடுமுறை வழங்கப்பட்டு, ஜூன் மாத தொடக்கத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது வழக்கமாகும். ஆனால், நடப்பாண்டு மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன்4-ம் தேதி வெளியிடப்பட உள்ளன.இதனால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று பெற்றோரிடையே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:

இந்த மாத தொடக்கத்தில் கோடை வெயில் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதன் காரணமாக பள்ளிகளை சற்று தாமதமாக ஜூன் 2-வது வாரத்தில் திறப்பதற்கு முதலில் திட்டமிட்டோம். ஆனால், கடந்த ஒரு வாரமாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் தாக்கம் இன்னும் ஒரு வாரம் வரை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் ஜூன் முதல் வாரத்திலேயே தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் பள்ளிகளை திறக்க பரிசீலனை செய்து வருகிறோம். இதுசார்ந்த ஆலோசனைக் கூட்டம் இந்த மாத இறுதியில் மே 27-ம் தேதி நடைபெற உள்ளது. அப்போதைய சூழல்களை கருத்தில் கொண்டு இறுதி முடிவு செய்யப்படும்.

எனினும், அலுவல் ரீதியாக பள்ளிகள் திறப்புக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

x