தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கான வினாடி - வினா கால அட்டவணை வெளியீடு


சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டிகள் ஜூலை முதல் பிப்ரவரி மாதம் வரை 4 கட்டங்களாக கணினி வழியில் நடத்தப்பட உள்ளன.

இது தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் இன்று அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: "தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் மாநில மதிப்பீட்டு புலம் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் 6 முதல் 9-ம் வகுப்பு வரையான அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை அறிந்து கொள்ள வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி நடப்பு கல்வியாண்டுக்கான வினாடி - வினா போட்டிகள் ஜூலை முதல் பிப்ரவரி மாதம் வரை 4 கட்டங்களாக கணினி வழியில் நடத்தப்பட உள்ளன. அதன்படி முதல்கட்டமாக ஜூலை 9 முதல் 18ம் தேதி வரையும், 2ம் கட்டமாக ஆகஸ்ட் 6 முதல் 14ம் தேதி வரையும், 3-வது கட்டமாக நவம்பர் 5 முதல் 15ம் தேதி வரையும், 4ம் கட்டமாக பிப்ரவரி 10 முதல் 14-ம் தேதி வரையும் வினாடி - வினா போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்த வினாடி-வினாவுக்கான வினாத்தாளை அந்தந்த வகுப்பாசிரியர் மட்டுமே உருவாக்க வேண்டும்.

மேலும், மதிப்பீடு முடிந்த பின் விடைத்தாளை பதிவிறக்கம் செய்து வகுப்பில் மாணவர்களுடன் விவாதிக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை பின்பற்றி போட்டிகளை சிறந்த முறையில் நடத்தி முடிக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும்."இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த போட்டியில் மாநில அளவில் சிறந்து விளங்கும் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

x