டிஜிட்டல் மெரிடைம் சப்ளை செயின் பாடத்தில் புதிய எம்பிஏ படிப்பு: சென்னை ஐஐடியில் அறிமுகம்


சென்னை: டிஜிட்டல் மெரிடைம் சப்ளை செயின் பாடத்தில் புதிய எம்பிஏ படிப்பை சென்னை ஐஐடி இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னை ஐஐடி மேலாண்மை துறையும், கடல்சார் பொறியியல் துறையும் இணைந்து டிஜிட்டல் மெரிடைம் சப்ளை செயின் பாடத்தில் புதிய எம்பிஏ படிப்பை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளது. கடல்சார் வர்த்தகம் தொடர்பான துறையில் 2 ஆண்டு அனுபவம் வாய்ந்த பட்டதாரிகள் இந்த படிப்பில் சேரலாம். பட்டப் படிப்பில் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இதற்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் நடைபெறும். மொத்தம் 100 இடங்கள் உள்ளன.

செப்டம்பர் மாதம் தொடங்கப்படும் இந்த படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கான வகுப்புகள் நேரடியாகவும், இணையவழியிலும் நடத்தப்படும். கடல்சார் வர்த்தகம் மற்றும் பொருள் விநியோக துறையில் தேவையான நிபுணர்களை உருவாக்கும் நோக்கில் இந்த படிப்பு தொடங்கப்படுவதாக ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, டீன் (பேராசிரியர்கள்) கே.முரளி, மேலாண்மைத்துறை தலைவர் எம்.தேன்மொழி ஆகியோர் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தனர்.

இந்த 2 ஆண்டு கால எம்பிஏ படிப்புக்கான மொத்தம் கல்விக் கட்டணம் ரூ.9 லட்சம் ஆகும். இதில் 50 சதவீதம் கல்வி உதவித் தொகையாக கிடைக்கும். எஞ்சிய கட்டணத்தை வங்கிகளில் கல்விக் கடனாக பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.