தமிழக அரசுப் பள்ளிகளின் கணினி ஆய்வகங்களுக்கு 6,890 பயிற்றுநர்கள் தேர்வு


பள்ளிக்கல்வித் துறை

சென்னை: அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் பணியாற்ற 6,890 பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து, அவர்களுக்கான பணிகளை வரையறை செய்து பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலா 20 கணினிகளும், உயர்நிலைப் பள்ளிகளில் 10 கணினிகளும் கொண்ட உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வகங்களை கடந்த ஐந்து ஆண்டுகளாக எல் அண்ட் டி நிறுவனம் பராமரித்து வந்த நிலையில் அதன் பராமரிப்பு காலம் முடிவடைந்தது.

இதையடுத்து உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களை பராமரிக்கவும், மாணவர்களுக்கு கணினி கல்வியைக் கற்றுத் தரவும் கணினி தொழில்நுட்பம் அறிந்தவர்களைத் தேர்வு செய்யும் பணிகளை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்ககம் மேற்கொண்டது. அவர்களுக்கான தேர்வு நடைமுறைகள் பின்பற்றப்பட்டன.

தொடர்ந்து, இது தொடர்பாக நடைபெற்ற கலந்தாய்வுக்கு 7,932 பேர் அழைக்கப்பட்டனர். அதில் 7,404 பேர் கலந்தாய்வில் பங்கேற்றனர். அதில் 6,890 பேர் ஆய்வக மேற்பார்வை பணிகளுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, தேர்வு செய்யப்பட்ட உயர்தொழில்நுட்ப ஆய்வக நிர்வாகி மற்றும் பயிற்றுநர்களுக்கான பணிகளை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்ககம் வரையறுத்துள்ளது.

அதன் விவரம்: தொழில்நுட்பக் குறைபாடுகள் ஏற்பட்டால் இணைய வசதி வழங்கியுள்ள நிறுவனங்கள் மற்றும் மின்சாரத் துறையினை உடனடியாக அணுகி சரி செய்ய வேண்டும். முக்கியமான தகவல்களை பாதுகாக்க தரவு தனியுரிமை மற்றும் ரகசியத் தன்மை கொள்கைகளை கடைப்பிடிப்பது அவசியம்.

உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் மற்றும் திறன்மிகு வகுப்பறைகளை பயன்படுத்தும் போது ஏற்படக்கூடிய பிரச்சினைகளை உடனடியாக வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் (ஐசிடி), மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், உதவி திட்ட அலுவலர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்களை தொடர்பு கொண்டு சரி செய்ய வேண்டும்.

ஆசிரியர்கள் கற்பித்தலின்போது தொழில்நுட்பத்தை திறம்பட ஒருங்கிணைக்க ஏதுவாக அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க வேண்டும். எமிஸ் மற்றும் யுடிஐஎஸ்இ சார்ந்த தரவுகளின் பதிவுகளை தங்களது பள்ளிக்கும், பள்ளியுடன் இணைக்கப்பட்டுள்ள குறுவள மைய பள்ளிகளுக்கும் மேற்கொள்ள வேண்டும்.

தரவு உள்ளீட்டின் சிறந்த நடைமுறைகளைப் பற்றி அறிந்து கொள்ளும் வகையில் பள்ளி மற்றும் இதர நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்பது அவசியம்.

மேலும், அவ்வப்போது வழங்கப்படும் இதர அறிவுரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். தேர்வு செய்யப்பட்ட உயர்தொழில்நுட்ப ஆய்வக நிர்வாகி மற்றும் பயிற்றுநர்களுக்கு மாத ஊதியமாக (அடிப்படை ஊதியம், பிஎஃப், இஎஸ்ஐ, வரி, இதர படிகள் உள்பட) ரூ.11,452 வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.