ஆழ்ந்த இரங்கல்டா தம்பி...


பாலபாரதி

ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன், மாணவியை பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் என்பதுபோன்ற செய்திகளையே அதிகம் பார்த்துவரும் நிலையில், முகநூலில் உள்ள அந்தப்பதிவு மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. படித்து முடித்ததும் நம்மையறியாமலே கண்ணீரும் துளிர்த்தது.

தன்னிடம் படித்த மாணவன் ஒருவனின் இறப்பைத் தாங்கமுடியாத அரசுப் பள்ளியின் ஆசிரியர், அந்த மாணவனின் நல்லியல்புகளைச் சுட்டிக்காட்டி மரணம் தந்த வேதனையை வார்த்தைகளால் பதிவு செய்திருக்கிறார். ஒரு நல்ல ஆசிரியர், நல்ல மாணவன் என்பதற்கான சிறந்த இலக்கணமாக இருக்கிறது அது.

முத்துப்பேட்டை, புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் ‘கனவு ஆசிரியர்’ சித.க.செல்வசிதம்பரம் தனது முகநூலில் செய்திருக்கும் அந்தப் பதிவு...

ஆழ்ந்த இரங்கல் டா தம்பி..

பாலபாரதி.. 5-ம் வகுப்பு வரை மங்களூர் தொடக்கப் பள்ளியில் படித்து, 2 ஆண்டுகளுக்கு முன்பு எம் பள்ளியில் 6-ம் வகுப்பில் சேர்ந்தான். அவன் சேர்ந்த அன்றே, மங்களூர் பள்ளியின் ஆசிரிய சகோதரி தொலைபேசியில் அழைத்தார். ’’கெட்டிக்கார பையன், நல்லா படிப்பான், அழகா பேசுவான்” என்றார். வந்து சேர்ந்த அன்றே என்னிடம் ஒட்டிக்கொண்டான். சிரமமான குடும்பப் பின்னணியிலிருந்து வந்தாலும் தன்னம்பிக்கை மிகுந்த பேச்சு, பெரிய மனிதர் போல பேச்சில் முதிர்ச்சி, காலையில் வந்தவுடன் என்னைத் தேடிப்பிடித்து வணக்கம் சொல்லிச்செல்வான்.

ஆசிரியர் செல்வசிதம்பரம்

6-ம் வகுப்பு சேர்ந்த புதிதில் விளையாடும்போது கீழே விழுந்து சிறு காயம் ஏற்பட்டது. உடனே, அருகில் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றேன். மூன்று தையல் போட்டார் அங்கிருந்த பெண் மருத்துவர். தையல் போட்டு முடித்த உடனே, இரண்டு கைகளையும் கூப்பி மருத்துவரை நோக்கி ’’ரொம்ப நன்றி டாக்டர், வலிக்கவே இல்லை” என்றான். அடுத்ததாக கைகளை கூப்பியவாறே என்னை நோக்கி ’’உங்களுக்கும் நன்றி சார், உடனே என்னை ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்ததற்கு” என்றான். சுற்றி இருந்த மருத்துவர், செவிலியர் ஆகியோர் பயங்கரமாக சிரித்துக்கொண்டே, “இப்படியெல்லாம் பேசவேண்டும் என்று சொல்லித்தந்து அழைத்துவருவீர்களோ சார்” என என்னை கிண்டல் செய்தார்கள்.

மற்ற மாணவர்களைப்போல ஆசிரியர்களைத் தவிர்க்காமல் பல கேள்விகள் கேட்பான், சில நேரம் நாம் சோர்வாக இருந்தால், ’‘ஏன் சார் டல்லா இருக்கீங்க” என அக்கறையோடு விசாரிப்பான். 6, 7, 8 மாணவர்கள் டை, பெல்ட் அணிந்து வரவேண்டும் என ஏற்பாடு செய்து தந்தோம். நாங்கள் தந்த டையை தொலைத்துவிட்டு, வீட்டில் சொல்லி வேறு வாங்கி தரச்செய்து மிக நீளமான டையை அணிந்து வந்தான். ‘‘இந்த டை உனக்கு பொருந்தவில்லை பாலபாரதி, வேறு டை உனக்கு வாங்கித் தருகிறேன்” என்றேன். அதற்கு அவன், ’’நீளமோ, கட்டையோ டை போட்டாலே கெத்துதானே சார். யார் கிண்டல் செய்தால் நமக்கென்ன’’ என்று பதில் அளித்து வியக்க வைத்தான்.

அன்றுதான் இந்தப் புகைப்படத்தை எடுத்து என் மனைவியிடம் காண்பித்து, அவன் கெட்டிக்காரத்தனத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். “பெரிய ஆளா வருவாங்க” என்றார், என் மனைவி. அரசு மருத்துவர் மாரிமுத்து, பள்ளிக்கு வந்து மாணவர்கள் உடல் பரிசோதனை செய்ய வந்தபோது, பாலபாரதியின் பேச்சில் அசந்து அவன் பேசுவதை வீடியோ எடுத்து, “எல்லா ஸ்கூல்லயும் இதைக் காண்பிக்கிறேண்டா தம்பி” என்றார்.

இப்பொழுது எங்கள் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தான். ஒரு வாரமாக பள்ளிக்கு வரவில்லை. தொலைபேசியில் விசாரித்தபோது, கொஞ்சம் உடல்நிலை சரியில்லை என்றார்கள். ஆனால், நேற்று காலை அவன் இறந்துவிட்டான் என்ற அதிர்ச்சி தரும் செய்தி என் காதுகளில் இடியாய் இறங்கியது. உடனடியாக கிளம்பி அங்கு சென்றபோது மஞ்சள்காமாலை என்று கூறினார்கள். அவனது தாய், தந்தை, தாத்தா, பாட்டி ஆகியோர் எங்களைக் கண்டு கதறி நின்ற நிலையைப் பார்த்து எங்களால் தாங்க இயலவில்லை.

அனைவரையும் கவரும் பேச்சு, பெரிய மனிதரைப் போல் பண்பாடு, ஆசிரியர்களை மதிக்கும் அன்பு, சிறப்பான படிப்பு, பெரிய ஆளாய் வருவடா பாலபாரதி என உன்னை என் வாயார பலமுறை கூறுவேனே, ஆலமரமாய் வளர்ந்து பலருக்கு நிழல்தருவாய் என நினைத்தோமே, அனைவரையும் தவிக்கவிட்டுச் சென்றாயேடா தம்பி.

சாதாரண மனிதர்களுக்கே உன்மேல் ஆசை இருக்கும்போது ஆண்டவனுக்கு மட்டும் உன் மேல் ஆசை இருக்காதா என்ன? அதனால்தானோ, அந்த ஆண்டவனே உன்னை ஆசைப்பட்டு அழைத்துக் கொண்டான் போல..

அந்தக் குழந்தையை இழந்து வாடும் பெற்றோருக்கு, காலம் நல்ல மருந்தை இட வேண்டும்.

ஆழ்ந்த இரங்கல்டா பாலபாரதி

-சித.க.செல்வசிதம்பரம்

x