100-க்கு 100... நெல்லை மாநகராட்சி பள்ளி மாணவிக்கு தங்க மோதிரம் - ஆசிரியர்கள் சொந்த செலவில் அணிவித்து பாராட்டு


திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்த மாணவி அபிநிஷாவுக்கு ஆசிரியர்கள் தங்களது சொந்த செலவில் தங்க மோதிரம் மற்றும் வெள்ளி பிரேஸ்லெட் அணிவித்து பாராட்டு தெரிவித்துள்ளனர்.

திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரத்தில் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியின் ஆங்கில ஆசிரியையாக மகேஷ்வரி பணியாற்றி வருகிறார். இவர் அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் ,ஆங்கிலத்தில் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்தால் தங்க மோதிரம் பரிசு வழங்குவதாக தெரிவித்திருந்தார். இதுபோல் சமூக அறிவியல் ஆசிரியை சுகந்திரா, கணித ஆசிரியை ஜானகி ஆகியோரும் தாங்கள் கற்பிக்கும் பாடங்களில் 100- க்கு 100 மதிப்பெண்கள் எடுத்தால் பரிசு தருவதாகவும் தெரிவித்திருந்தனர்.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் இப்பள்ளி மாணவி அபிநிஷா 500-க்கு 492 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றார். மேலும் ஆங்கிலம், சமூக அறிவியல் பாடங்களில் தலா 100 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்றார்.

இந்நிலையில், கோடை விடுமுறைக்குப் பின் பள்ளி இன்று திறக்கப்பட்ட நிலையில், இப்பள்ளியில் மாணவி அபிநிஷாவுக்கு ஆசிரியர்கள் பாராட்டினர். அவரை ஊக்குவிக்கும் வகையில் அவருக்கு ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் பாடம் எடுத்த ஆசிரியைகள், தாங்கள் ஏற்கெனவே உறுதி அளித்த படி தங்க மோதிரம் மற்றும் வெள்ளி பிரேஸ்லெட் ஆகியவற்றை அம்மாணவிக்கு அளித்து பாராட்டு தெரிவித்தனர்.

இவற்றை தலைமை ஆசிரியர் மேரி மார்கிரெட் மாணவிக்கு அணிவித்து பாராட்டினார். இதுபோல் கணித பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்த இப்பள்ளி மாணவிகள் 4 மாணவிகளுக்கு கணித ஆசிரியை அறிவித்தபடி நான்கு வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கப்பட்டது.