ஆசிரியர்களின் கோரிக்கைளை நிறைவேற்றுக!


மருத்துவர் ராமதாஸ்

இன்று (செப்டம்பர் 5) ஆசிரியர்கள் தினம். பிரதமர், முதல்வர் உட்பட அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் ஆசிரியர்களுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், ஆசிரியர்களின் அனைத்து கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை:

ஒட்டுமொத்த சமுதாயத்தின் முன்னேற்றத்துக்கும் காரணமாகத் திகழும் ஆசிரியர்கள் தினத்தை கொண்டாடும் ஆசிரியர்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏழைக் குடும்பத்தில் பிறந்து, ஆசிரியராகப் பணி செய்து, இந்தியாவின் முதல் குடிமகன் என்ற உன்னத நிலையை அடைந்தவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியர் என்று போற்றப்படும் அவரது பிறந்தநாள்தான் ஆசிரியர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் தமிழக அளவிலும், தேசிய அளவிலும் நல்லாசிரியர் விருது பெறும் அனைத்து ஆசிரியர்களுக்கும் உளமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓர் அறையில் விலைமதிப்பு மிக்க எந்தப் பொருளும் இல்லாவிட்டாலும் கூட, சிறிய விளக்கு ஒளி மட்டும் இருந்துவிட்டால், அது அந்த அறையையே நிறைத்துவிடும். அதேபோல், ஒரு நாட்டில் எந்த வளமும் இல்லாவிட்டாலும் கூட கல்வியும், மனித வளமும் மட்டும் நிறைந்திருந்தால், அந்த நாட்டுக்கு மீதமுள்ள அனைத்து வளங்களும் கிடைத்துவிடும். கல்வியின் சிறப்பு அந்த அளவுக்கு மகிமையானது. கல்விக்கு அம்மகிமையை வழங்குபவர்கள் கல்வி தரும் வள்ளல்களான ஆசிரியர்கள்தான்.

ஆசிரியர்கள் தங்களின் பணியை வேலையாகச் செய்யவில்லை; சேவையாகச் செய்கின்றனர் என்பதற்கு, கடந்த ஒன்றரை ஆண்டு கரோனா காலத்தில் பல உதாரணங்கள் படைக்கப்பட்டுள்ளன. கரோனாவால் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், ஏழை மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, அவர்கள் வாழும் பகுதிகளுக்கே சென்று பாடம் நடத்திய ஆசிரியர்களைத் தமிழகம் அடையாளம் கண்டது. கரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு வரும் நிலையில், மாணவர்களின் கற்றல் இழப்பை ஈடுசெய்ய அனைத்து ஆசிரியர்களும் கடுமையாக உழைக்க வேண்டும்.

அனைவரின் உயர்வுக்கும் காரணமான ஆசிரியர்கள் எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கும் வகையில், அவர்களின் தேவைகள் நிறைவேற்றப்பட்டால்தான் அவர்களால் மிகச்சிறந்த கல்வியை மாணவர்களுக்கு வழங்க முடியும். ஆனால், ஆசிரியர்களின் நியாயமான பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் கிடக்கின்றன. ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு, அதன் மூலம் அவர்களின் குறைகள் களையப்பட வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

x