கோயில் விழா ஏற்பாட்டின்போது மின்சாரம் தாக்கி கர்ப்பிணி, கணவர், மூதாட்டி உயிரிழப்பு - விருதுநகர் அருகே சோகம்


விருதுநகர்: விருதுநகர் அருகே கோயில் திருவிழாவில் மைக்செட், சீரியல் கட்டும்போது மின்சாரம் தாக்கி 7 மாத கர்ப்பிணி, அவரது கணவர், மூதாட்டி ஆகியோர் உயிரிழந்தனர். 2 பேர் பலத்த காயமடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அருகே உள்ள காரிசேரி மாரியம்மன் கோயிலில் கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இன்று 45வது நாள் மண்டல பூஜை நடைபெற்றது. இதற்காக கிராமத்தில் மைக் செட் மற்றும் சீரியல் லைட் அமைக்கும் பணி நடைபெற்றது. மைக் செட் அமைக்கும் பணியில் அதே ஊரை சேர்ந்த திருப்பதி ஈடுபட்டிருந்தார். அவர் மைக் செட் மற்றும் சீரியல் லைட் அமைப்பதற்காக கேபிள் டிவி வயருக்கு மேல் மின் வயரை தூக்கி வீசியுள்ளார்.

அப்போது, எதிர்பாராத விதமாக உயர் அழுத்த மின் கம்பி மீது சீரியல் லைட் வயர் உரசியது. அப்போது, திருப்பதி கையிலிருந்த வயரிலிருந்து மின் கசிவு ஏற்பட்டு மைக்செட் உரிமையாளர் திருப்பதி(28) மீது மின்சாரம் பாய்ந்தது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கர்ப்பிணியான அவரது மனைவி லலிதா (25), திருப்பதியின் பாட்டி பாக்கியம் (65), திருப்பதியின் தம்பி தர்மர் (18), சித்தப்பா மகன் கவின் (15) ஆகியோர் திருப்பதியை காப்பாற்ற முயன்றனர். அப்போது 5 பேர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் திருப்பதி, அவரது மனைவி லலிதா, மூதாட்டி பாக்கியம் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தர்மரும் கவினும் பலத்த காயமடைந்தனர். உயிரிழந்த லலிதா 7 மாத கர்ப்பிணி. இவர்களுக்கு ரட்சகன் என்ற இரண்டரை வயது மகன் ஒருவர் உள்ளார்.

தகவலறிந்த ஆமத்தூர் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று காயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டன.

கோயில் விஷேசத்தின்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கர்ப்பிணி உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் காரிசேரி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த விபத்து குறித்து ஆமத்தூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x