திருவண்ணாமலை அருகே அரசு பேருந்தும், காரும் நேற்று அதிகாலை நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரில் பயணித்த புதுச்சேரியைச் சேர்ந்த லாரி உரிமையாளர்கள் 4 பேரும் உயிரிழந்தனர்.
பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலை வழியாக புதுச்சேரிக்கு நேற்று அதிகாலை கார் சென்றது. சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்து வந்துள்ளது. திருவண்ணாமலை அடுத்த சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சோமாசிப்பாடி அருகே காட்டுக்குளம் என்ற இடத்தில் அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. பேருந்தின் (ஓட்டுநர் இருக்கை) வலது பக்கத்தின் அடிப்பகுதியில் காரின் முன்பகுதி முழுவதும் புகுந்துவிட்டது. இதில் கார் உருகுலைந்தது. பேருந்தின் முன் பகுதி சேதமடைந்தது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேரும் உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கீழ்பென்னாத்தூர் காவல்துறையினர், பொதுமக்களுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காரில் உயிரிழந்த 4 பேரது உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அவர்களது விவரங்களை சேகரித்தனர்.
இதில் உயிரிழந்த 4 பேரும் புதுச்சேரியைச் சேர்ந்த சதீஷ்குமார்(52), சைலேஷ்குமார்(38), ஸ்டாலின்(42), சரோப்(47) ஆகியோர் என்பதும், 4 பேரும் லாரி உரிமையாளர்கள் என்பதும், தொழில் ரீதியாக பெங்களூரு சென்றுவிட்டு புதுச்சேரிக்கு திரும்பியபோது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது தெரியவந்தது. புதுச்சேரி லாரி உரிமையாளர் சங்க செயலாளராக ஸ்டாலின் இருந்துள்ளார்.
கீழ்பென்னாத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் சிக்கிய அரசு பேருந்து, கார் ஆகியவை சாலையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது. கோர விபத்தால் சென்னை - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.