போடி: தமிழக எல்லையான போடி மெட்டு அருகே கர்நாடகாவைச் சேர்ந்த கார் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பற்றியது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் கிஷோர்குமார்(44) இவர் தனது மனைவி நித்யா (35)மனைவி மகன்கள் ஜோஸ்வா(14) ஜோயல்(11) ஆகியோருடன் காரில் மூணாறுக்கு சுற்றுலா சென்றிருந்தார்.
அங்குள்ள சுற்றுலா தலங்களைப் பார்த்துவிட்டு இன்று (ஏப்.13) மாலை தேவிகுளம், பூப்பாறை வழியே போடிமெட்டு நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். தமிழக எல்லையான போடிமெட்டு அருகே உள்ள கேரளா கலால் சோதனைச் சாவடி அருகே வந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்தது. திருப்பத்தில் நிலை தடுமாறியதில் 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
மற்ற வாகன ஓட்டிகளும், அப்பகுதியைச் சேர்ந்தவர்களும் உடனடியாக அவர்களை மீட்டனர் இந்நிலையில் அந்த கார் திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.
நெடுங்கண்டம், மூணாறில் இருந்து தீயணைப்புத்துறை ஊழியர்கள் மீட்புப்பணிக்காக வந்தனர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்தது. இந்த விபத்தில் நித்யாவுக்கு இடது கை மற்றும் தோள்பட்டையிலும், கிஷோர் குமாருக்கு தொடையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. இதே போல் ஜோஸ்வாவிற்கு இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. ஜெயிலுக்கு முதுகில் பின்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.
நால்வருக்கும் போடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்பு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சாந்தாம்பாறை போலீஸார் கூறுகையில் குறைவான பள்ளம் என்பதால் மீட்புப் பணியை விரைந்து மேற்கொள்ள முடிந்தது. மேலும் அருகில் உள்ளவர்கள் விரைந்து செயல்பட்டதாலும் அவர்களை காயங்களுடன் மீட்க முடிந்தது. அதிக வளைவு கொண்ட சாலை இது. வேகத்தினால் நிலை தடுமாறி இருக்கலாம். இருப்பினும் முழு விசாரணைக்குப் பிறகே விபத்துக்கான காரணம் தெரிய வரும் என்றனர்.