திண்டுக்கல்: சாணார்பட்டி அருகே தடுப்பணையில் மூழ்கி சகோதரிகள் இருவர் உயிரிழந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே சோழகுளத்துப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி தங்கராஜ். இவர் குடும்பத்தினருடன் நேற்று அஞ்சுகுழிப்பட்டி அருகேயுள்ள தடுப்பணையில், துணி துவைக்க தனது மனைவி மற்றும் இரு குழந்தைகள் மற்றும் உறவினர்களின் குழந்தைகள் இருவருடன் சென்றுள்ளார். துணிதுவைத்துவிட்டு சிறிது தூரத்தில் உள்ள பாறையில் கணவன், மனைவி இருவரும் துணியை காயவைத்துக்கொண்டிருந்தனர்.
அப்போது தடுப்பணை ஓரம் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் நால்வரும் அடுத்தடுத்து நீருக்குள் சென்று விளையாடியதில் மூழ்கத்துவங்கினர். கூக்குரல் கேட்டு அப்பகுதியில் சென்ற ஒருவர் ஓடிவந்து இரண்டு குழந்தைகளை காப்பாற்றினார். தங்கராஜூவின் மகள்கள் 12 வது படித்த பேபிஸ்ரீ(17), ஆறாம் வகுப்பு படித்துவந்த நாகசக்தி(12) ஆகியோர் நீரில் மூழ்கியதில் உயிரிழந்தனர். இதுகுறித்து சாணார்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.