இளைஞரின் முகத்தை சிதைத்து கொடூரமாக கொலை; சிவகங்கை இளையான்குடி அருகே பயங்கரம்


சிவகங்கை: இளையான்குடி அருகே முகத்தை சிதைத்து இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

இளையான்குடி அருகே வேலடிமடை கிராமத்தில், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த மகேஷ் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் கீழத்தூர் பகுதியை சேர்ந்த நவீன் எனும் இருவரும் அறுவடை இயந்திரம் இயக்கி வந்துள்ளனர்.

நேற்று அறுவடை பணிகளை முடித்துவிட்டு, இருவரும் வேலடிமடையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் படுத்து உறங்கினர். அப்போது நள்ளிரவில் மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் வந்து மகேஷை கொடூரமாக தாக்கி, அவரின் முகத்தை சிதைத்து கொலை செய்துள்ளனர். உடன் இருந்த நவீன் ரத்த காயத்துடன் கிராமத்துக்குள் சென்று தகவல் கூறியிருக்கிறார்.

மக்கள் ஓடிவந்து பார்த்தபோது, மகேஷ் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக போலீஸார் வந்து மகேஷ் உடலை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தாக்குதலில் படுகாயமடைந்த நவீனுக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ள இச்சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

x