போலி ஆவணங்கள் மூலம் தனியார் வங்கியில் ரூ.2 கோடி கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் 4 பேரின் ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவி்ட்டுள்ளது.
சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் வங்கியில் ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த ஏகாம்பரம், கேசவன் கங்காராஜ், கிருஷ்ணமூர்த்தி, குமார் ஆகியோர் தங்களை மென்பொறியாளர்கள் எனக்கூறி பல தவணைகளில் ரூ.2 கோடி கடன் பெற்றுள்ளனர். இவர்களுக்கான சம்பள சான்றிதழை குமார் என்பவர் போலியாக தயாரித்து கொடுத்துள்ளார்.
இதற்கிடையே, வாங்கிய கடனை முறையாக திருப்பி செலுத்தாத நிலையில் இவர்கள் போலி ஆவணங்கள் மூலமாக கடன் வாங்கியிருப்பதும், கூலி வேலை செய்து வருவதும், இவர்களுக்குப் பின்னணியில் மேலும் சிலர் இருப்பதும் தெரியவந்தது.
இது தொடர்பாக வங்கி நிர்வாகம் அளி்த்த புகாரின் பேரில் ஏகாம்பரம், குமார், கேசவன் கங்காராஜ், கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 பேரை கைது செய்த போலீஸார், தலைமறைவாகவுள்ள நாகராஜ், மணிகண்டன், கோபால், வெங்கடேஷ் ஹர்ஷா ஆகிய 4 பேரை தேடி வருகின்றனர்.
இந்த வழக்கில் கைதான 4 பேரும் தங்களுக்கு ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பாக நடந்தது.
அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான பெருநகர தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன், ‘‘இந்த வழக்கு விசாரணை ஆரம்பக் கட்டத்தி்ல் இருக்கிறது. மேலும் 4 பேர் தலைமறைவாகி உள்ளனர். போலி ஆவணங்கள் தயாரித்து கொடுக்க குமாருக்கு ரூ.40 லட்சம் வரை கமிஷனாக வழங்கப்பட்டுள்ளது. ரூ.2 கோடிக்கு கடன் பெற்று சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன’’ என வாதிட்டார். அதையடுத்து நீதிபதி 4 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.