திருப்பத்தூர்: மாமியார் உயிரிழந்து விட்டதாக சமூக வலைத் தளங்களில் வதந்தி பரப்பிய மருமகனை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (38). பிளம்பர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வினோதினி (28). இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக வினோதினி தன் கணவரை பிரிந்து கந்திலி அருகே லக்கி நாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு செனறார். பிறகு அவர் கணவர் வீட்டுக்கு திரும்பவில்லை.
இதைத் தொடர்ந்து லக்கி நாயக்கன்பட்டி பகுதிக்கு வந்த வெங்கடேசன், வினோதினியை குடும்பம் நடத்த அழைத்தார். ஆனால், வினோதினி வர மறுத்ததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன் மனைவியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த வினோதினி உறவினர்களால் மீட்கப்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை வினோதினியின் தாயார் மாது கண்டித்தார்.
இந்நிலையில், வினோதினியின் தாயார் மாது உயிரிழந்து விட்டதாக கண்ணீர் அஞ்சலி வீடியோ ஒன்றை உருவாக்கி அதனை சமூக வலைத்தளம் மூலம் உறவினர்களுக்கு வெங்கடேசன் பரப்பினார். இது குறித்து வினோதினி அளித்த புகாரின்பேரில் கந்திலி காவல் துறையினர் வழக்குப் பதிந்து வெங்கடேசனை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.