கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சிவக்குமார், அவரது மனைவி சூர்யா மகாலட்சுமி ஆகியோர் கடந்த 5 வருடங்களாக ஏலச்சீட்டும், அதையொட்டி தீபாவளி சீட்டும் நடத்தி வந்தனர். அந்த வகையில் சுமார் 800 பேர் மாதம் ரூ.1,000 செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஒவ்வொருவரும் லட்சக் கணக்கில் பணம் செலுத்தி வந்த நிலையில், கடந்த இரு வருடங்களாக ஏலச்சீட்டு எடுத்தவர்களுக்கு பணம் திருப்பித் தராமல் ஏமாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பணம் செலுத்தியவர்கள், பலமுறை கேட்டும் செலுத்திய பணம் கிடைக்கவில்லை.
இது குறித்து கள்ளக்குறிச்சி பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் விசாரணை நடத்திய குற்றப்பிரிவு போலீஸார், சூர்யா மகாலட்சுமியை நேற்று முன்தினம் கைது செய்தனர். அதைத்தொடர்ந்து தலைமறை வாக இருந்த அவரது கணவர் சிவக்குமாரை நேற்று கைது செய்தனர். கணவன், மனைவி இருவரும் பாஜகவில் மாவட்ட அளவில் முக்கிய பொறுப்புகள் வகித்து வந்ததாக கூறப்படுகிறது.