கள்ளக்குறிச்சி: அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் அன்பழகன் (59). இவர், 6 மற்றும் 8-ம் வகுப்பு வரையில் சமூக அறிவியல் பாட ஆசிரியாக இருந்து வருகிறார். இவர் வகுப்பறையில் பாடம் நடத்தும்போது, மாணவிகளிடம் இரட்டை அர்த்தமுள்ள உதாரணங்களை கோடிட்டும், மாணவிகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் விதமாகவும் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து மாணவிகள், தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து மாணவிகளின் பெற்றோர், ஆசிரியர் அன்பழகன் மீது தலைமையாசிரியருக்கும், பள்ளிக் கல்வித் துறை உயர் அதிகாரிகளுக்கும் புகார் மனு அனுப்பி வைத்தனர். இதையடுத்து ஆசிரியர் அன்பழகனிடம் துறை ரீதியான விசாரணை மேற்கொண்டதில், அவர் மாணவிகளிடம் அநாகரீகமாக பேசியது உண்மை எனத் தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கார்த்திகா, ஆசிரியர் அன்பழகனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.