சென்னை: அரசு மேற்கொண்டு வரும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் காரணமாக, சென்ற ஆண்டை விட இந்தாண்டு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் பதியப்படும் வழக்குகள் 6 விழுக்காடு குறைந்துள்ளது. வன்கொடுமைக்கு ஆளாகும் பகுதிகள் 2021-ல் 445-லிருந்து 2024-ல் 368 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது 19 விழுக்காடு குறைவாகும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (29.03.2025) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் ஆற்றிய உரையில், “இந்த நேரத்தில், மாற்றத்தை நோக்கி நாம் எடுத்துள்ள சில முன்னெடுப்புகளை உங்களிடம் பகிர விரும்புகிறேன்.
நாம் இன்று மதிப்போடும், சுயமரியாதையோடும், உரிமைகளோடும் இருக்கிறோம் என்றால், அதற்கு தந்தை பெரியாரும், புரட்சியாளர் அம்பேத்கரும் தான் காரணம்! அவர்களது பிறந்தநாளை முறையே சமூகநீதி நாளாகவும், சமத்துவ நாளாகவும் நாம் கொண்டாடி வருகிறோம்.வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்திட, ஜனவரி 24 முதல் 30 வரை மனித நேய வார விழா. சமத்துவத்தை நிலைநாட்டும் விதமாக ஜனவரி 26, ஆகஸ்ட் 15 மற்றும் அக்டோபர் 2 மற்றும் வேறு முக்கிய உள்ளூர் விடுமுறை நாட்களிலும் சமபந்தி விருந்து. ‘சமத்துவம் காண்போம்’ என்ற தலைப்பில் காவல் துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த 40 லட்சம் ரூபாய் செலவில் 983 நபர்களுக்கு பயிற்சி.
சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையைக் கடைபிடிக்கும் கிராமங்களை ஊக்குவிக்கும் வகையில், 10 கிராமங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் ரூபாய் வீதம் கடந்த நான்கு ஆண்டுகளில், 259 கிராமங்களுக்கு 25 கோடியே 90 லட்சம் ரூபாய் நிதி. மாநிலம் முழுவதிலும், இந்த 4 ஆண்டுகளில், சமூகநீதி மற்றும் சமத்துவ சிந்தனைகள் குறித்து ஆறாயிரத்து 977 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள். இதில், கடந்தாண்டு மட்டும் மூன்றாயிரத்து 794 விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் திறனை மேம்படுத்தவும், பல்வேறு வகையான சமூக விலக்குகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பயிற்சிகளை வழங்கவும் மற்றும் தரவுகள் சேகரிக்கவும், 1 கோடியே 59 லட்சம் ரூபாய் அரசு மானியத்துடன், சமூகநீதி மற்றும் சமத்துவத்திற்கான மையம் ஒன்று சென்னை சமூகப் பணி கல்லூரியில் நிறுவப்பட்டு, அந்த மையம், விளிம்பில் உள்ள பழங்குடியினர் மக்களை பற்றிய ஆய்வுகள், ஆவணப்படங்கள், விழிப்புணர்வுக் கூட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகள் மற்றும் செயல்களை செய்து வருகிறது.
அரசு மேற்கொண்டு வரும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் காரணமாக, சென்ற ஆண்டை விட இந்தாண்டு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் பதியப்படும் வழக்குகள் 6 விழுக்காடு குறைந்துள்ளது. வன்கொடுமைக்கு ஆளாகும் பகுதிகள் 2021-ல் 445-லிருந்து 2024-ல் 368 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது 19 விழுக்காடு குறைவாகும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் தொண்டு செய்வோருக்கு ஆண்டுதோறும் திருவள்ளுவர் நாளன்று டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. 2022-2023-ஆம் ஆண்டு முதல் பரிசுத்தொகை ரூபாய் ஒரு இலட்சத்திலிருந்து ஐந்து இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு, அதற்கான காசோலையும், ஒரு சவரன் மதிப்பிலான தங்கப்பதக்கமும் வழங்கப்படுகிறது. 2024-ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருது முனைவர் து.ரவிக்குமார் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோர்களுக்கு வழக்கின் தன்மைக்கேற்றவாறு வழங்கப்படும் தீருதவித் தொகை, 8 லட்சம் ரூபாயிலிருந்து 12 லட்சம் ரூபாயாக மாநில அரசின் நிதியிலிருந்து கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில், வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சார்ந்த 421 பேர்களுக்கு வேலைவாய்ப்புகளும், 649 பேர்களுக்கு ஓய்வூதியமும் வழங்கப்பட்டுள்ளன.
தீருதவித் தொகையாக 207.26 கோடி ரூபாய் 17,098 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.நடப்பாண்டில், ஒரு புதிய முயற்சியாக, வன்கொடுமைகள் குறித்த புகாரினைத் தெரிவித்தல், வழக்கு பதிவு செய்ய உதவுதல், வழக்கின் தற்போதைய நிலையினை அறிதல், தீருதவிகள் வழங்குதல் மற்றும் சட்ட ஆலோசனை வழங்குவதற்கு தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய உதவி மையம் துவக்கப்பட்டு தற்போது சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் அவர்களது சட்டபூர்வமான உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களுடைய முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், தன்னாட்சி அதிகாரத்துடன் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியின் தலைமையில் செயல்படுகிறது. இதுவரை இந்த ஆணையத்திற்கு வரப்பெற்ற 5,191 மனுக்களில், 4,038 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளன.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கென அவர்களது மக்கள்தொகை சதவிகிதத்திற்கு ஏற்ப வழங்கப்படும் நிதியை முழுவதுமாக பயன்படுத்துவதை உறுதி
செய்திட, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல்திட்ட சட்டம், 2024 மற்றும் அதற்கான விதிகள் இயற்றப்பட்டுள்ளது.
2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் பொதுப்பிரிவினரின் கல்வியறிவு 80.09 விழுக்காட்டிலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கல்வியறிவு 73.26 விழுக்காட்டிலும் உள்ளது. கல்வி அறிவை உயர்த்தும் பொருட்டு இந்தத் துறையின் மொத்த நிதி ஒதுக்கீடு 3 ஆயிரத்து 924 கோடி ரூபாயில், கல்வி சார்ந்த திட்டங்களுக்காக மட்டும் 2 ஆயிரத்து 798 கோடி ரூபாயில், அதாவது சுமார் 71.31 விழுக்காடு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டிற்குச் சென்று உயர்கல்வி பெறும் திட்டத்திற்கான வருமான உச்சவரம்பை 2023-ஆம் ஆண்டு முதல் இரண்டு அடுக்குகளைக் கொண்டு திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
முதல் அடுக்கில், எட்டு லட்சம் ரூபாய்க்கு குறைவாக குடும்ப ஆண்டு வருமானம் உள்ள மாணாக்கர்களுக்கு ஆண்டுக்கு 36 லட்சம் ரூபாய் வரையும், இரண்டாவது அடுக்கில், 8 இலட்சம் ரூபாய்க்கு மேல், 12 இலட்சம் ரூபாய்க்கு குறைவாக குடும்ப ஆண்டு வருமானம் உள்ள மாணாக்கர்களுக்கு ஆண்டுக்கு 24 லட்சம் ரூபாய் வரையும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகையின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் பராமரிப்பு உதவித்தொகை ஒன்றிய அரசு வழங்கும் உதவித்தொகைக்கு இணையாக மாநில அரசால் உயர்த்தப்பட்டுள்ளது.
முழுநேர முனைவர் பட்டப் படிப்புகளுக்கான கல்வி உதவித்தொகை மூலம் பயன்பெறும் மாணாக்கர் எண்ணிக்கை ஆயிரத்து 400-லிருந்து 2024-ஆம் ஆண்டில் இரண்டாயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
பழங்குடியின மக்கள் எளிதாக கல்வி பெறுவதற்கு அவர்களின் குடியிருப்புகளுக்கு அருகில் உணவு மற்றும் தங்கும் வசதிகளுடன் கூடிய 328 உண்டி உறைவிட பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும், ஒருங்கிணைந்த சமையற் கூடம், விடுதிகளில் கண்காணிப்புக் கேமரா, பயோமெட்ரிக் வருகைப் பதிவுடன் கூடிய விடுதி மேலாண்மை அமைப்பு, மாணவர்களுக்கு நல்லோசை எனும் சிறப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி, பள்ளி மாணவர்களுக்கு கற்றல் இனிதே எனும் சிறப்பு கல்வி சார்ந்த பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், நவீன வசதிகளுடன் கூடிய பொதுவான கருத்தரங்கு, பயிற்சிகள் நடத்த 120 கிராம அறிவு மையங்கள் 117 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் பொருளாதார மேம்பாடு, தொழில் முனைவோர் கடனுதவிகள், நிலம் மேம்பாடு மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குதல் போன்ற திட்டங்களை உள்ளடக்கி முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ், தனிநபர் திட்ட மதிப்பீட்டில் 35 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், இதில் எது குறைவானதோ அந்தத் தொகை முன்விடுவிப்பு மானியமாக வழங்கப்படுகிறது.
மேலும், வங்கியில் கடன் தவணை தொகையினை தவறாமல், திரும்ப செலுத்தும் பயனாளிகளுக்கு 6 விழுக்காடு வட்டி மானியம் வழங்கப்படுகிறது.
கடந்த இரண்டாண்டுகளில், இந்தத் திட்டத்தின்கீழ் 468 பயனாளிகளுக்கு 89 கோடியே 71 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
வேளாண் தொழிலாளர்களாக உள்ள ஆதிதிராவிட மகளிரை நில உடைமையாளர்களாக மாற்றி, சமூகநிலை மற்றும் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் ‘நன்னிலம்’ எனும் ஆதிதிராவிடர் மகளிருக்கான நிலம் வாங்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில், 625 பயனாளிகளுக்கு 30 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டு, மகளிரை நில உடைமையாளராக இந்த அரசு மாற்றியுள்ளது.
பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், வளர்ச்சிக்கான அடிப்படை வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தாட்கோ மூலம் வழங்கப்படும் மானியத்தை 2023-ஆம் ஆண்டு முதல் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயிலிருந்து 6 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு, நடப்பாண்டில் 140 பயனாளிகளுக்கு 8 கோடியே 25 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் குடியிருப்பில், அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில், அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம் செயல்பட்டு வருகிறது.
2023–2024-ஆம் நிதியாண்டில் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஊரக மற்றும் நகராட்சித் பகுதிகளில் 1,690 உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் செய்து முடிக்கப்பட்டன.
2024-2025-ஆம் நிதியாண்டில் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 1,966 பணிகள் எடுக்கப்பட்டு முடிக்கும் தருவாயில் உள்ளன. இந்த ஆண்டு, இந்த திட்டத்திற்காக 280 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பழங்குடியின மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கில் பழங்குடியினர் குடியிருப்புகளில் வீடுகள், சாலைகள், குடிநீர் வசதிகள், தெரு விளக்குகள் மற்றும் அடிப்படை வசதிகளுக்கும் அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக வாழ்வாதார திட்டங்களுக்காக ஆண்டிற்கு 250 கோடி ரூபாய் வீதம், நான்கு ஆண்டுகளில், ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ‘தொல்குடி’ என்ற திட்டம், 2024–2025 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தூய்மைப் பணியாளர் நல வாரியம், ஜெய் பீம் தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகர்கள் நல சங்கம், நரிக்குறவர் மற்றும் இருளர் பழங்குடியினருக்கான சிறுவணிக கடன், என் கல்லூரி கனவு - உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி, களமாடு முதலிய பல்வேறு புதுமையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு ஆதிதிராவிட பழங்குடியின மக்களின் வாழ்வதாரம் மேம்படுத்தப்பட்டு அம்மக்களுக்கான சரிசமமான உரிமைகள் உறுதிசெய்யப்படுகின்றன.
கலைகள், பண்பாடு, இலக்கியம், இசை, நடனம் ஆகிய கலை வடிவங்களை பாதுகாக்கவும், காட்சிப்படுத்தவும் தமிழகத்தில் முதல்முறையாக ஆதி கலைக்கோல் என்னும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை மற்றும் இலக்கிய சங்கமம் டிசம்பர் 2, 2024 அன்று சென்னையில் நடைபெற்றது.
இதில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் வகையில், 300 புகைப்படங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள், 800- க்கும் மேற்பட்ட இசைக்கருவிகள், பண்பாட்டினை பிரதிபலிக்கும் ஆடைகள் காட்சிப்படுத்தப்பட்டன.
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் 2066 தொழில் முனைவோர்களுக்கு அரசு மானியமாக 243 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இதில் 400 மகளிர் தொழில்முனைவோர் 41 கோடியே 87 லட்சம் ரூபாய் மானியமாக பெற்றுள்ளனர்.
இந்தத் திட்டத்தின் மூலமாக தூய்மைப் பணியாளர்களை தொழில்முனைவோர்களாக மாற்றவும், அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தவும், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றுதல் வாரியத்தின் சார்பில் உன்னத திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
TN-BEAT என்னும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான தொழில் முனைவோர் சிறப்பு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சென்னையில் நடத்தப்பட்டது. இதில், 375 அரங்குகள் அமைக்கப்பட்டு, அதில் எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட உற்பத்தி பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த தொழில் முனைவோருக்கு, பல்வேறு தொழில் மற்றும் வணிக வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்தது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும், அவர்களது வாழ்க்கை மேம்பாட்டிற்கான இத்திட்டத்தினை தொடர்ந்து மேற்கொள்ளும் உறுதியுடன் இந்த அரசு உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்