ராமநாதபுரம்: ரூ.1000 லஞ்சம் வாங்கிய வருவாய் இளநிலை உதவியாளருக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்கி ராமநாதபுரம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ராமநாதபுரம் ஓம்சக்தி நகரைச் சேர்ந்தவர் திலீப் முகம்மது (47). இவர் ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் வருவாய் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 18.03.2015 ஆம் தேதி ராமநாதபுரம் அருகே சூரங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவரிடம் பட்டாவில் கணினி திருத்தம் செய்ய ரூ.1000 லஞ்சம் வாங்கியதுபோது, ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
இவர் மீது ராமநாதபுரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இன்று நடைபெற்ற இறுதி விசாரணையில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மோகன்ராம், வருவாய் இளநிலை உதவியாளர் திலீப் முகம்மதுவிற்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் , ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அதனையடுத்து லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் அவரை கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.