சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரியில் பெண் பயிற்சி மருத்துவரிடம் அத்துமீறிய இளைஞர் கைது: நடந்தது என்ன?


அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதிக்குச் சென்ற பெண் பயிற்சி மருத்துவரிடம் அத்துமீறி செயல்பட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரு தினங்களுக்கு முன் இரவுப் பணி முடிந்து விடுதிக்குச் சென்ற பெண் பயிற்சி மருத்துவரிடம் ஓர் இளைஞர் அத்துமீறியதுடன், அவரைத் தாக்கியுள்ளார். இது தொடர்பாக டிஎஸ்பி அமலஅட்வின் தலைமையிலான தனிப் படை போலீஸார் விசாரணை நடத்தி, சிவகங்கை ஆவரங்காட்டைச் சேர்ந்த கார் ஓட்டுநர் சந்தோஷ் (20) என்பவரைக் கைது செய்தனர்.

விசாரணையில், தனது தாயாரிடம் தகராறு செய்த சந்தோஷ், பின்னர் அரசு மருத்துவமனை வளாகத்தில் பார்வையாளர்கள் தங்குமிடத்தில் தூங்குவதற்காக வந்துள்ளார். மதுபோதையில் இருந்த அவர், தனியாக நடந்து சென்ற பெண் பயிற்சி மருத்துவரிடம் அத்துமீறி நடந்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவத்தை கண்டித்து 2-வது நாளாக பயிற்சி மருத்துவர்கள் நேற்றும் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

சென்னை மருத்துவக் கல்வி இயக்குநரகத்திலிருந்து வந்த துணை இயக்குநர்கள் ஜெயராஜ், சாந்தி ஆகியோர் தலைமையிலான குழுவினர் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர். அக்குழுவினரிடம், "இரவில் தங்க அறை இல்லை. விடுதிக்குச் செல்லும் வழியில் மின்விளக்குகள் இல்லை. சிசிடிவி கேமராக்கள் இயங்கவில்லை’ என்று பயிற்சி மருத்துவர்கள், மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.

பின்னர், அவசர சிகிச்சை மற்றும் தலைக்காயப் பிரிவில் பயிற்சி மருத்துவர்களுக்கான ஓய்வறை பூட்டிக்கிடப்பதை பார்த்த இயக்குநரக குழுவினர், மருத்துவ நிர்வாகத்திடம் சாவியைப் பெற்று, அந்த அறையைத் திறந்துவிட்டனர். விசாரணையின்போது, நிலைய மருத்துவ அலுவலர் மகேந்திரன், உதவி அலுவலர்கள் ரபீக், தென்றல் உடனிருந்தனர்

x