திண்டுக்கல்: கொடைக்கானலில் உடல் பாதி எரிந்த நிலையில் கிடந்த மருத்துவரின் தந்தையின் உடலைக் கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடைக்கானல் அருகே சின்னப்பள்ளம் பகுதியில் ஒரு முட்புதரில் உடல் பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இறந்த நபர் குறித்து விசாரித்தனர்.
அதில், இறந்தது கொடைக்கானலைச் சேர்ந்த மருத்துவர் சாய் சரவணனின் தந்தை சிவராஜ் (59) என்பதும், அவரது மனைவி இறந்த நிலையில் தனியாக வசித்து வந்ததும் சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து சென்றவர் அதன் பிறகு மீண்டும் வீடு திரும்பவில்லை என்பதும் தெரிய வந்தது.
போலீஸார் கூறுகையில், இறந்த நபர் தங்கியிருந்த விடுதி அறையில் ரத்தக் கறை இருந்தது. அங்கிருந்து இறந்து கிடந்த பகுதி வரை ரத்தக் கறை இருந்தது. இதனால் அவரை கொலை செய்து எரிக்க முயன்றனரா என விசாரணை நடப்பதாக கூறினர்.