சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் அதிர்ச்சி: இரவில் விடுதிக்கு சென்ற பெண் மருத்துவரிடம் அத்துமீறல்


சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இரவில் விடுதிக்கு சென்ற பெண் பயிற்சி மருத்துவரிடம் மர்மநபர் அத்துமீறல் சம்பவத்தை கண்டித்து பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நேற்றுமுன்தினம் இரவு மருத்துவமனையில் பணி முடிந்து விடுதிக்கு பெண் பயிற்சி மருத்துவர் நடந்து சென்றார். அப்போது பின்புறம் வந்த மர்மநபர், பயிற்சி பெண் மருத்துவர் முகத்தை துணியால் மூடி தாக்க முயன்றார். இதையடுத்து அவர் கூச்சலிட்டுள்ளார்.

அந்தசமயத்தில் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் பணியாளர் ஒருவரின் கணவர் வந்துள்ளார். அவரை பார்த்ததும், மர்ம நபர் தப்பிச்சென்றார். அங்கு தெருவிளக்குகள் இல்லாததால் தப்பியோடியவரை அடையாளம் காண முடியவில்லை.

இச்சம்பவத்தை கண்டித்தும், பெண் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி பயிற்சி மருத்துவர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள், மருத்துவமனை உள்பகுதி வழியாக விடுதிக்குச் செல்லும் பாதை இரவு நேரங்களில் மூடப்படுகிறது. அதை திறந்துவிட வேண்டும். மின்விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதான சிசிடிவி கேமராக்களை சீரமைப்பது உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டுமென கல்லூரி டீன் சத்தியபாமாவிடம் கோரிக்கை வைத்தனர்.

தகவலறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத் பயிற்சி மருத்துவர்களை சமரசப்படுத்தினார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சென்றனர். தொடர்ந்து மருத்துவக் கல்லூரி டீன் சத்தியபாமா அளித்த புகாரின் பேரில் சிவகங்கை நகர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x